ராம நவமியால் பற்றி எரியும் வட இந்தியா.. நாளை அனுமன் ஜெயந்தி- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அட்வைஸ்
டெல்லி: ராம நவமி கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளால் பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அனுமன் ஜெயந்தி நாளை கொண்டாடப்படும் போது அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
ராம நவமி பண்டிகை சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின் போது பீகார், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் பெரும் வன்முறை வெடித்தது. பீகார் மாநிலத்தின் சாஸரம், நாளந்தா பகுதிகள் பற்றி எரிந்தன. இந்த சம்பங்கள் தொடர்பாக இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறைகளில் ஒருவர் கொல்லப்பட்டார். பீகார் வன்முறைகள் தொடர்பாக ஆளும் ஜேடியூ-ஆர்ஜேடி கூட்டணி அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

இதேபோல் மேற்கு வங்க மாநிலத்திலும் ராம நவமி கொண்டாட்டங்கள் பெரும் கலவரத்தில் முடிவடைந்துள்ளன. பாஜக முன்னெடுத்த ராம நவமி ஊர்வலங்கள் பெரும்பாலும் வன்முறையாக வெடித்தன. ஆகையால் மேற்கு வங்கம் மாநிலம் பழைய ஜம்மு காஷ்மீர் மாநிலமாகிவிட்டது; முதல்வர் மமதா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்கிறது பாஜக. மாநில ஆளுநரும் மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளார்.

இத்தகைய ராம நவமி பண்டிகை வன்முறைகள் ஓயாத நிலையில் நாளை அனுமன் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தி நாளில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறா வகையில் மாநில அரசுகள் அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications