கோரத்தாண்டவமாடும் கொரோனா.. கடும் நெருக்கடியில் மத்திய பாஜக அரசு- நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்?
டெல்லி: கொரோனா பாதிப்பும் கொரோனா உயிரிழப்பும் உச்சகட்டத்தில் தொடருவதில் மத்திய பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. கொரோனா ஒருநாள் உயிரிழப்பும் 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
ஒருநாள் கொரோனா பாதிப்பு, உயிரிழப்புகளில் உலக அளவில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் பற்றாக்குறை இன்னமும் தீர்ந்தபாடில்லை. ஆக்சிஜன் பற்றாகுறையால் உயிரிழப்புகள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன.

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்
இதனால் பல மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. லாக்டவுன் என பிரகடனப்படுத்தாமல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

வெளுக்கும் நீதிமன்றங்கள்
மத்திய அரசைப் பொறுத்தவரை முழு லாக்டவுனை அமல்படுத்துவதில்லை என்பதில் உறுதியாக இருந்து வருகிறது. ஆனால் கொரோனா வழக்குகளை விசாரித்து வரும் உயர்நீதிமன்றங்களோ, மத்திய மாநில அரசுகளை வெளுவெளுவென வெளுத்துக் கொண்டிருக்கின்றன.

பிரதமர் மோடி கருத்து
லாக்டவுன் என்பது கடைசி ஆயுதம் என ஏற்கனவே பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் வேறுவழியே இல்லாமல் நாடு தழுவிய லாக்டவுனை பிரகடனப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. நாடு தழுவிய லாக்டவுன் தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

நாடு முழுவதும் லாக்டவுன்?
இந்த ஆலோசனைக்குப் பின்னர் நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தும் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்த உடன் லாக்டவுன் அமலுக்கு வரும் என்கின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications