3 பேர் மரணத்துக்கு நீதி கோரி டெல்லியில் விடிய விடிய மாணவர்கள் போராட்டம்- குழு அமைத்த மத்திய அரசு!
டெல்லி: 3 பயிற்சி ஐஏஎஸ் மாணவர்கள் வெள்ளத்தில் மூழ்கி பலியான சம்பவத்துக்கு நீதி கோரி டெல்லியில் மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தைத் தொடர்ந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் வெள்ளத்தில் பலியானது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு 30 நாட்களில் விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும்.
டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி மையங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். அந்த வகையில் மேற்கு டெல்லியில் பழைய ரஜிந்தர் நகரில் ராவ் ஐஏஎஸ் ஸ்டடி சர்க்கிள் என்ற பயிற்சி மையம் உள்ளது.

இந்த பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் விதிகளுக்கு மாறாக நூலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை மாலை அதன் தரைத்தளத்திற்கு கீழ் உள்ள அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் பயிற்சி மாணவர்கள் சிலர் படித்துக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த மழை பெய்த நிலையில் மழை நீர் வடிகால் வழியாக மழை நீர் செல்ல வழி இல்லாமல் அடித்தளத்துக்குள் புகுந்துவிட்டது.
இதனால் தண்ணீரில் மூழ்கி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரேயா யாதவ் (25), தெலுங்கானாவை சேர்ந்த தன்யா சோனி (25), கேரளாவை சேர்ந்த நவீன் தால்வின் (28) ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் நேற்று முன் தினம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட. இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பயிற்சி மையத்தின் உரிமையாளர், ஒருங்கிணைப்பாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதே சமயத்தில் மாநகராட்சியும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. பழைய ரஜிந்தர் நகர் பகுதியில் சட்டவிரோதசமாக செயல்பட்டு வந்த ராவ் பயிற்சி மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது அது போல் மேலும் சில மையங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.
வடக்கு டெல்லியின் முகர்ஜி நகரிலும் அடித்தளத்தில் செயல்படும் மையங்களை கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் 3 பேர் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்கு அருகே 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 10 லட்சம் வழங்கப்படும் என டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அறிவித்துள்ளார். அது போல் இந்த உயிரிழப்பு குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இந்த விசாரணைக் குழு 30 நாட்களுக்குள் விபத்துக்கான காரணங்களை கண்டறிந்து நடவடிக்கைகள், கொள்கை மாற்றங்களை பரிந்துரை செய்யும் என தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஐஏஎஸ் அகாடமியின் உரிமையாளர், அவருடைய மனைவி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications