ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் மரணம்- முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவு: ராஜ்நாத்சிங்
டெல்லி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தது குறித்து முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளார்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு சபைகளிலும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கை தாக்கல் செய்தார்.

ராஜ்நாத்சிங் அறிக்கை
ராஜ்நாத்சிங் இன்று தாக்கல் செய்த அறிக்கையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விவரித்திருந்தார். ராஜ்நாத்சிங் தமது அறிக்கையில் கூறியதாவது: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் அடங்கிய குழு புதன்கிழமை காலை 9 மணிக்கு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோவை சூலூர் விமான படை தளத்துக்கு சென்றனர். கோவை சூலூர் விமானப் படை தளத்தில் பகல் 11.35 மணிக்கு இந்த சிறப்பு விமான தரை இறங்கியது.

7 நிமிடத்துக்கு முன் விபத்து
பின்னர் சூலூர் விமான படை தளத்தில் இருந்து முற்பகல் 11.48 மணிக்கு விமானப் படைக்கு சொந்தமான எம்.ஐ 17 வி5 ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி வெலிங்டன் ராணுவ மையத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்த ஹெலிகாப்டருடனான அனைத்து தொடர்புகளும் பிற்பகல் 12.08 மணிக்கு துண்டிக்கப்பட்டன. வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பிற்பகல் 12.15 மணிக்கு இந்த ஹெலிகாப்டர் சென்றடைந்திருக்க வேண்டும். வெலிங்டனில் தரை இறங்குவதற்கு 7 நிமிடத்துக்கு முன்னதாக விபத்தில் சிக்கியது.

பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழப்பு
பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அப்பகுதி உள்ளூர் மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிலரைக் காப்பாற்றவும் பொதுமக்கள் முயற்சித்தனர். ஆனால் பிபின் ராவத் உட்பட 13 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துவிட்டனர். குரூப் கேடன் வருண்சிங் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
Recommended Video

முப்படை விசாரணைக்கு உத்தரவு
இந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகிய முப்படைகளும் இணைந்து விசாரணை மேற்கொள்ளும். இவ்விசாரணைக் குழு ஏற்கனவே குன்னூர் சென்றடைந்துள்ளது. விமானப் படை தளபதி ஏர்மார்ஷல் மன்வேந்திரா சிங் தலைமையில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. முப்படைகளின் முழு மரியாதையுடன் பிபின் ராவத் உடல் வெள்ளிக்கிழமையன்று தகனம் செய்யப்படும். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார். முன்னதாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் பிபின் ராவத் உள்ளிட்டோர் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications