மேகதாது அணை: தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு திட்டம்?
டெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணையை கட்டுவதில் கர்நாடகா அரசு தீவிரமாக உள்ளது. கர்நாடகாவின் இந்த முயற்சிக்கு தமிழகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தமிழக அனைத்து கட்சிக் கூட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகாவின் பிடிவாதமான போக்குக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

டெல்லி செல்லும் குழு
மேலும் மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது; தமிழக அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்று மத்திய அரசிடம் இதனை வலியுறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கர்நாடகா பிடிவாதம்
ஆனாலும் மேகதாது அணையை கட்டுவோம் என்று தொடர்ந்து கர்நாடகா கூறி வருகிறது. இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

4 மாநில முதல்வர்கள் கூட்டம்?
காவிரி நதிநீர் பிரச்சனையில் தொடர்புடைய தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications