மக்கள் தொகை, கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம்: மத்திய அரசு
டெல்லி: மக்கள் தொகை, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் கொரோனா தடுப்பூசி வீணாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Recommended Video
மத்திய அரசின் கொரோனா தொடர்பான மறுசீரமைக்கப்பட்ட கொள்கை முடிவுகளை பிரதமர் மோடி திங்கள்கிழமை வெளியிட்டார். இதனடிப்படையில் ஜூன் 21-ந் தேதி முதல் தடுப்பூசி போடுவதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
மத்திய அரசு இதுவரை 24 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இதுவரை வழங்கி வந்தது. இனி இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளில் 75%-த்தை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்கும்.

புதிய விநியோக முறை
தடுப்பூசி விநியோகங்களில் குழப்பம் ஏற்படாமல் இருக்க மாநிலங்களின் மக்கள் தொகை எண்ணிக்கை, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கொரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கை, கொரோனா தடுப்பூசிகள் வீணாகுதல் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 33% பேருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி எண்ணிக்கை குறைவு
45 முதல் 60 வயதுக்குட்பட்டோரில் 41.7% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஆனால் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோரில் 25.3% பேருக்குதான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

1.19 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு
தற்போதைய நிலையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1.19 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. இந்த நிலையில் நேற்று மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களின் படி, சுகாதார பணியாளர்கள், முன்கள பாணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை தரப்பட வேண்டும்.

மாநிலங்களில் முன்னுரிமை
அதேபோல் 18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மாநிலங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும்; கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்ட விவரங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications