பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு இன்று முதல் அமல்! சென்னையில் ஒரு லிட்டர் எவ்வளவு?
டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி தலா ரூ 2 உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போதிலும் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
கலால் வரி என்பது இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் சில பொருட்களுக்கு மத்திய அரசு விதிப்பதாகும். இது உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரியாகும்.

இந்த வரியை உற்பத்தியாளர்களே செலுத்திவிட்டு, அதை அந்த பொருளின் விலையுடன் சேர்த்து வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்துக் கொள்வார்கள். அந்த வகையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்ந்தால் அதை எண்ணெய் நிறுவனங்கள் செலுத்திவிட்டு, அந்த தொகையை வாடிக்கையாளர்களிடம் வசூலித்துவிடும்.
இந்த நிலையில் கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்கள்தான் செலுத்த வேண்டும் என்றும் அதை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல் , டீசல் விலையும் உயரும், அது குறைந்தால் அவை குறையும். இப்படித்தான் நடைமுறையும் விலை நிர்ணயமும் இருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி தலா ரூ 2 உயர்வு என மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த விலையுயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பெட்ரோல் டீசல் விலை உயரும் என வாகன ஓட்டிகள் அஞ்சிய நிலையில் அதற்கான நிவாரணத்தையும், எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதன் மூலம் மத்திய அரசு வழங்கிவிட்டது.
கடைசியாக 2017 ஆம் ஆண்டு அக்டோபரில் கலால் வரி 2 ரூபாயும் அதன் பிறகு ரூ.1.50 பைசா குறைக்கப்பட்டது. பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் ரூ 2 உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி 2 ரூபாயும் டீசலுக்கு ரூ 5 ம் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 100.80-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications