சக்கா ஜாம்.. டெல்லியில் 50,000 போலீஸ் குவிப்பு.. பல மெட்ரோ ரயில்கள் மூடல்
டெல்லி: விவசாயிகள் 'சக்கா ஜாம்' போராட்டத்தையடுத்து, டெல்லி-என்.சி.ஆரில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. டெல்லி-என்.சி.ஆரில் டெல்லி காவல்துறை, துணை ராணுவம் மற்றும் ரிசர்வ் படைகளின் சுமார் 50,000 பேர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.
சக்கா ஜாம் சனிக்கிழமையான இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுக்க சாலை போக்குவரத்தை தடுத்து நிறுத்தி போராடி வருகிறார்கள் விவசாயிகள்.
மாலை 3 மணிக்கு தங்கள் வாகனங்களை ஒரு நிமிடம் நிறுத்தி, ஒலி எழுப்ப விவசாயிகள், நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். சக்கா ஜாமிற்கு காங்கிரஸ் தனது ஆதரவை வழங்கியுள்ளது.
ஜக்கா ஜாம் என்றால், வாகன போக்குவரத்தை தடுத்து நிறுத்துவது என்பது அர்த்தமாகும்.
போராட்டங்கள் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டி ஹவுஸ், ஐ.டி.ஓ, டெல்லி கேட், விஸ்வவித்யாலயா, லால் குயிலா, ஜமா மஸ்ஜித், ஜனபாத், கான் மார்க்கெட், நேரு பிளேஸ் மற்றும் மத்திய செயலகம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளன.
செங்கோட்டை மற்றும் ஐ.டி.ஓ உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் கூடுதல் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜனவரி 26ம் தேதி டிராக்டர் பேரணியின்போது வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கு நடைபெற்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.