சக்காஜாம் : டெல்லி எல்லையில் துணை ராணுவம், அதிரடிப்படை குவிப்பு - உச்சக்கட்ட பாதுகாப்பு
சக்கா ஜாம் சாலை மறியல் போராட்டத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் டெல்லியின் எல்லைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து காவல்துறையின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக சக்கா ஜாம் எனப்படும் சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியின் எல்லைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து காவல்துறையின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காவல் துறையினர் மட்டுமின்றி துணை ராணுவப் படை வீரர்கள், சிறப்பு அதிரடி படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடும் குளிர், மழை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருவதால் அரசு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் 11 தடவை பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முடிவும் எட்டப்படாததால் விவசாயிகள் போராட்டம் நீடித்தப்படி உள்ளது.
இன்று பிற்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சக்கா ஜாம் என்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். சக்கா ஜாம் என்பது மற்ற வாகனங்களின் சக்கரங்களை ஓட விடாமல் செய்வது ஆகும். டெல்லியில் உள்ள விவசாயிகள், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்திற்கு வரவேண்டுமென அழைப்பு விடுத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி காவல்துறை, பாதுகாப்பு மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டன.

டெல்லி எல்லைகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியின் எல்லைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காவல் துறையினர் மட்டுமின்றி துணை ராணுவப் படை வீரர்கள், சிறப்பு அதிரடி படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
டிராக்டர் பேரணியில் நிகழ்ந்தது போல சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எதுவும் நிகழாத வகையிலும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி உள்ளார். இதனையடுத்து தலைநகரில் உள்ள 12 மெட்ரோ ரயில் நிலையங்களையும் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தடுப்பு அரண்கள்
டெல்லி, உத்தரப்பிரதேசம் எல்லையான காசிப்பூரில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து பாலத்திற்கு மேலேயும், கீழேயும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, வேலிகளின் மேல்புறம் முள்கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. இணையதள சேவையும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை இயக்கமுடியாத வகையில் சாலைகளில் கூர்மையான ஆணிகளும் அடிக்கப்பட்டுள்ளன.

மூன்று எல்லைகளிலும் குவிப்பு
சிங்கு, திக்ரி எல்லைகளில் தடுப்பு வேலிகள், சிமெண்டால் ஆன தடுப்புகள், சாலைகளில் பள்ளம், சில இடங்களில் ஆணிகளும் அடிக்கப்பட்டுள்ளன. திக்ரியில் மெட்ரோ நிலையம் பகுதியில் பாலத்திற்கு கீழே போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு கண்டெய்னர்கள் நிறுத்தப்பட்டு, சாலையின் நடுவே கூர்மையான ஆணிகள் மற்றும் கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளன. டெல்லியின் மூன்று எல்லைகளும் காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications