நள்ளிரவில் திடீர் பரபரப்பு! டெல்லி ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காமல் அதிகரித்த கூட்டம்! என்ன நடந்தது
டெல்லி: தலைநகர் புது டெல்லியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்திலேயே அங்கு மக்கள் கூட்டம் அதிகளவில் திரண்டதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. இதையடுத்து உடனடியாக நிலைமையை உணர்ந்த அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்ததால் நிலைமை கட்டுக்குள் வந்து, கூட்டம் குறைந்துள்ளது.
நமது நாட்டில் ரயில்கள் தான் முக்கியமான பொது போக்குவரத்து முறையாக இருக்கிறது. டிக்கெட் விலை குறைவு, நினைத்த இடத்திற்குச் செல்லலாம் எனப் பல காரணங்கள் இருப்பதால் மக்கள் ரயில்களில் பயணிக்கவே ஆர்வம் காட்டுகிறார்கள். அதேநேரம் போதிய ரயில்கள் இயக்கப்படுவதில்லை, ரயில்கள் தாமதம் என ரயில்வே மீதும் கூட பல்வேறு புகார்கள் வைக்கப்படுகிறது.

டெல்லி ரயில் நிலையம்
இதற்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு புது டெல்லி ரயில் நிலையத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. முன்னதாக மகா கும்பமேளா நடைபெறும்போது அங்குக் கடந்த பிப்ரவரி 15ம் தேதி இதேபோல கூட்ட நெரிசல் ஏற்பட்டது இதில் 11 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் 4 குழந்தைகள் உயிரிழந்திருந்தனர். இதற்கிடையே மீண்டும் அங்கு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகரித்த கூட்டம்
ஞாயிறு இரவு அங்குப் பல ரயில்கள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதமே இந்த கூட்ட நெரிசலுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. அதேநேரம் இதனால் மோசமான சம்பவம் எதுவும் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், சில ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் 12 மற்றும் 13 ஆகிய பிளாட்பாரங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது..
கூட்டம் அதிகரிப்பதை உணர்ந்த ரயில்வே அதிகாரிகள், உடனடியாக தேவையான அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசாரை ரயில் நிலையத்தில் குவித்துள்ளனர். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட சூழலில், நிலைமை கட்டுக்குள் வந்தது. மேலும், சில ரயில்கள் அடுத்தடுத்து புறப்பட்டதால் கூட்டம் குறைந்தது. ஞாயிறு இரவு மொத்தம் 5 முக்கியமான ரயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
என்ன காரணம்
முதலில் இரவு 8:05 மணிக்குப் புறப்பட வேண்டிய சிவகங்கா எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமாகி, இறுதியில் இரவு 9.20 மணிக்குப் புறப்பட்டது. இரவு 9.15 மணிக்குப் புறப்பட இருந்த சுதந்திர சேனானி எக்ஸ்பிரஸ் நடைமேடைக்கு வந்திருந்த போதிலும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், ஜம்மு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (இரவு 9.25 மணிக்குப் புறப்பட வேண்டியது) மற்றும் லக்னோ மெயில் (இரவு 10 மணிக்குப் புறப்பட வேண்டியது) இரண்டுமே தாமதம் ஆனது. இது மட்டுமின்றி இரவு 9.05 மணிக்குப் புறப்பட வேண்டிய மகத் எக்ஸ்பிரஸ் நடைமேடைக்கு வரவே தாமதம் ஆனது.
அதிகாரிகள் நடவடிக்கை
இதுபோல ஒரே நேரத்தில் பல்வேறு ரயில்கள் கிளம்பத் தாமதம் ஆனதே கூட்டம் அதிகரிக்கக் காரணமானது. மக்கள் கூட்டம் அதிகரிப்பதை உணர்ந்த அதிகாரிகள் உடனடியாக கூட்டத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர். குறிப்பாக நடைமேடைகளில் இருக்கும் கூட்ட நெரிசலைத் தடுக்க முன்பதிவு செய்யாத பயணிகளைக் காத்திருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னரே கூட்டம் படிப்படியாகக் குறைந்தது.












Click it and Unblock the Notifications