பஞ்சாப்பை தொடர்ந்து சட்டீஸ்கரிலும் புகைச்சல்.. டெல்லி செல்லும் முதல்வர் பாகல்.. ராகுலுடன் அவசர மீட்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் சந்திப்பு நடத்த உள்ளார். சட்டீஸ்கர் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பலர் இன்று ராகுலுடன் சந்திப்பு நடத்த உள்ளனர்.
பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அம்ரீந்தர் சிங்கிற்கும் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு இடையில் சமாதானம் ஏற்பட்டது போல தகவல்கள் வெளியானாலும் இன்னும் புகைச்சல் அடங்காமல் எம்எல்ஏக்களுக்கு இடையில் மோதல் நிலவி வருகிறது.
இந்த நிலையில்தான் சட்டீஸ்கரில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் கோஷ்டி மோதல் வெடித்துள்ளது. அங்கு முதல்வர் பூபேஷ் பாகலிற்கும் சுகாதாரத்துறை அமைச்சர் டிஎஸ் சிங் டியோவிற்கும் இடையில் அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலுக்கு என்ன காரணம்?
சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த போது அங்கு பூபேஷ் பாகல் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட போதே இந்த கோஷ்டி மோதல் ஏற்பட்டது. பூபேஷ் பாகலுக்கு முதல்வர் பதவி வழங்குவதை டிஎஸ் சிங் டியோ விரும்பவில்லை. இதனால் காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின்படி பூபேஷ் பாகல் இரண்டரை ஆண்டுகளும், டிஎஸ் சிங் டியோ மீதி இரண்டரை ஆண்டுகளும் ஆட்சியில் இருப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால் சிக்கல்
ஆனால் இப்போது முதல்வர் பதவியை டிஎஸ் சிங் டியோவிற்கு விட்டுக்கொடுக்க பூபேஷ் பாகல் விரும்பவில்லை. முதல்வர் பதவியை பாதியில் மாற்றுவது சரியாக இருக்காது என்று பூபேஷ் பாகல் கூறி வருகிறார். ஆனால் டிஎஸ் சிங் டியோ எப்படியாவது முதல்வர் பதவியை ஒப்பந்தப்படி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். சட்டீஸ்கர் சட்டசபையில் மொத்தம் 90 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் காங்கிரசிடம் 68 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

ஓபிசி
இந்த 68 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஓபிசி பிரிவினர் பலர் உள்ளனர். முதல்வர் பூபேஷ் பாகல் ஓபிசி பிரிவை சேர்ந்தவர். அங்கு மக்கள் பெரும்பான்மையினரும் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் பூபேஷ் பாகல் தனக்கு இருக்கும் ஆதரவை பயன்படுத்தி முதல்வராக நீடிக்க விரும்புகிறார். இவருக்கு எம்எல்ஏக்கள் ஆதரவும் அதிகம் உள்ளது. ஆட்சி மீதும் பெரிய எதிர்ப்பு கிடையாது.

எதிர்ப்பு
அதே சமயம் டிஎஸ் சிங் டியோ தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். இவருக்கும் சில எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆதரவாக உள்ளனர். இந்த நிலையில் தற்போது டெல்லியில் தங்கி இருக்கும் இவர் முதல்வர் பதவியை பெற்றுவிடுவதில் உறுதியாக இருக்கிறார். காங்கிரஸ் தலைமையும், ராகுல் காந்தியும் கூட டிஎஸ் சிங்கின் ஒப்பந்தத்தை மதிக்குப்படி பூபேஷ் பாகலுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறார்.

செவ்வாய்
கடந்த செவ்வாய் கிழமையே டிஎஸ் சிங், பூபேஷ் பாகல் மற்றும் ராகுல் காந்தி இடையே மீட்டிங் நடைபெற்றது. இதில் சுமுக முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இரண்டு பேரும் இந்த மீட்டிங்கில் சமாதானம் ஆகவில்லை. இந்த நிலையில்தான் இன்று சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் சந்திப்பு நடத்த உள்ளார். சட்டீஸ்கர் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பலர் இன்று ராகுலுடன் சந்திப்பு நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications