உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி..சந்திரசூட் பெயரை பரிந்துரை செய்த யு.யு.லலித்
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை செய்துள்ளார். நாட்டின் 50வது தலைமை நீதிபதியாக வரும் நவம்பர் 9ஆம் தேதி சந்திரசூட் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த என்.வி.ரமணா, கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றதையடுத்து நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பொறுப்பேற்றார். தற்போதைய தலைமை நீதிபதிக்கு 74 நாட்கள் மட்டுமே பதவிக்காலம் உள்ளது. இந்த சூழலில்தான், நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி லலித் பரிந்துரைத்துள்ளார்.
நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 65 வயது வரை பதவி வகிக்கலாம். தற்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவி வகித்து வருகிறார். அவர் அடுத்த மாதம் 8-ந்தேதி பணி நிறைவு செய்கிறார். இதனிடையே, அடுத்த தலைமை நீதிபதி பெயரை சிபாரிசு செய்யுமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது.

டி.ஒய்.சந்திரசூட்
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை செய்துள்ளார். டி.ஒய். சந்திரசூட்டை சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கான பரிந்துரை கடிதத்தை இன்று தலைமை நீதிபதி யு.யு.லலித் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார்.

யு.யு லலித்
ஓய்வுபெற உள்ள தலைமை நீதிபதி, தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு சிபாரிசு செய்வது வழக்கம். அந்த அடிப்படையில், யு.யு.லலித்திற்கு அடுத்து மிக மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட், அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார்.

யார் இந்த சந்திரசூட்
தனஞ்ஜெயா சந்திரசூட் 1959ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பிறந்தவர். அவரது தந்தை யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட். இந்தியாவிற்காக நீண்ட காலம் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட். டி.ஒய்.சந்திரசூட்டின் தாய் பிரபா இசைக்கலைஞர். டி.ஒய்.சந்திரசூட் மும்பையில் உள்ள கதிட்ரல் ஜான் கோனன் பள்ளியிலும், டெல்லியில் உள்ள செயின்ட் கொலும்பா பள்ளியிலும் படித்தார்.

கல்லூரி வாழ்க்கை
பொருளாதாரத்திலும், கணிதத்திலும் டெல்லியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1982ம் ஆண்டு டெல்லி சட்டப்பல்கலைகழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். பின்னர், 1983ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைகழகத்தில் சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

வழக்கறிஞர் வாழ்க்கை
ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் ஜோசப் எச்.பீலே பரிசு வென்றுள்ளார். 1986ம் ஆண்டு சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார். டெல்லியில் சட்டக்கல்லூரியில் பயின்றபோதே ஜூனியர் வழக்கறிஞராக பயிற்சி பெற ஆரம்பித்தார். ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் சட்டம் பெற்ற பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சல்லிவன் மற்றும் க்ரோம்வெலில் வழக்கறிஞராக பணியாற்றினார். இந்தியா திரும்பிய பிறகு உச்சநீதிமன்றம் மற்றும் பாம்பே உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். 1998ம் ஆண்டு பாம்பே உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். நீதிபதியாக பொறுப்பேற்கும் வரை கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஆப் இந்தியாவாக நியமிக்கப்பட்டார்.

பாம்பே உயர்நீதிமன்றத்தின் நீதிபதி
2000ம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி பாம்பே உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2013ம் ஆண்டு அக்டோபர் 13-ந் தேதி நியமிக்கப்பட்டார். 2016ம் ஆண்டு மே 13-ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2021ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் உறுப்பினர் ஆனார்.

மூத்த நீதிபதிகள் குழு
இந்தியாவின் மூத்த நீதிபதிகள் 5 பேர் அடங்கிய குழுவான இந்த கொலிஜீயமே நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளையும், உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளையும் நியமிக்க பரிந்துரை செய்வது ஆகும். மேலும், பல்வேறு நாடுகளின் சட்ட பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகளையும் எடுத்துள்ளார்.

உச்சநீதிமன்ற 50வது தலைமை நீதிபதி
சந்திரசூட் வரும் நவம்பர் 9ஆம் தேதி, நாட்டின் 50 வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக வரும் 9ஆம் தேதி பதவியேற்க உள்ள டி.ஒய்.சந்திரசூட் 2024ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதிவரை அப்பொறுப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications