யூ டூ பூட்டான்? சீனாவுடன் கை குலுக்கி எல்லை ஒப்பந்தம்... இந்தியாவிடம் இருந்து கை நழுவிப் போகிறதோ?
டெல்லி: சீனாவும் பூட்டானும் எல்லை பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. பூட்டான் தனிநாடாக இருந்த போதும் இந்தியாவுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. தற்போது சீனாவுடன் பூட்டான் நெருக்கமான உறவை வளர்ப்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு சறுக்கலா? என்கிற விவாதம் எழுந்துள்ளது.
Recommended Video
பூட்டானுடன் சுமார் 700 கி.மீ. சர்வதேச எல்லையை பகிர்ந்து கொள்கிறது இந்தியா. பூட்டானுடன் சுமார் 400 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொள்கிறது சீனா.
ஆங்கிலேயர் ஆட்சியில் பிரிட்டிஷ் இந்தியா நிர்வாகத்தின் கீழ்தான் பூட்டான் இருந்தது. 1947-ல் நாடு விடுதலை அடைந்த போது பூட்டான் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்தியா- பூட்டான் உறவு
ஆனாலும் பூட்டானுடனான பல்வேறு ஒப்பந்தங்களில் இந்தியாவின் கட்டுப்பாடு நிலைநிறுத்தப்பட்டு வந்தது. 1980கள் வரை இலங்கையை எப்படி இந்தியா தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோ அதேபோல் பூட்டானும் இருந்து வருகிறது. பூட்டானுக்கும் சீனாவுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் இல்லை. இந்தியாவில் உள்ள சீன தூதரகம் மூலமே பூட்டான் தகவல் பரிமாற்றங்களை மேற்கொண்டும் வருகிறது.

சிக்கன்நெக் டோக்லாம்
பூட்டானின் டோக்லாம் பீடபூமியானது இந்தியாவுக்கு மிக முக்கியமான பாதுகாப்பு பிரதேசம். இந்தியா-சீனா- பூட்டான் 3 நாடுகளும் சந்திக்கும் இடம் டோக்லாம். இது பூட்டானையும் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையும் பிரிக்கிறது. அதேநேரத்தில் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் மைய நிலப்பரப்புடன் இணைக்கக் கூடிய பகுதியுமாகும். அதானால் டோக்லாம் பீடபூமியை சிக்கன் நெக் அல்லது கோழி கழுத்துப் பகுதி என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் அழைப்பார்கள். டோக்லாம் பிரதேசத்தின் மீதான இந்தியாவின் கட்டுப்பாடு துண்டிக்கப்பட்டால் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் இந்தியாவின் பிடியில் இருந்து கை நழுவிப் போகும் என்பது கள யதார்த்தமாக இருக்கிறது.

சீனாவுடன் மோதல்
அதனால்தான் 4 ஆண்டுகளுக்கு முன்னர் டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்க முயன்ற போது பூட்டானுக்காக இந்தியா களத்தில் இறங்கியது. டோக்லாமில் இந்தியா- சீனா ராணுவம் இடையே 73 நாட்கள் மோதல் போக்கு நீடித்தது. பின்னர் பல்வேறு கட்ட பேச்சுகளுக்குப் பின்னர் டோக்லாம் பிரச்சனை முடிவுக்கு வந்தது. இருந்த போதும் சீனாவுடன் இணக்கமாக போக வேண்டும் என்கிற குரல்கள் அவ்வப்போது பூட்டானில் எழுவதும் வழக்கம்.

சீனா - பூட்டான் ஒப்பந்தம்
இந்நிலையில்தான் பூட்டான்-சீனா இடையே எல்லை பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் Wu Jianghao இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதுவரை பூட்டானும் சீனாவும் எல்லை தகராறு தொடர்பாக 26 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கின்றன. இதன் ஒரு கட்டமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்கிறார் பூட்டான் வெளியுறவு அமைச்சர் டிண்டி டோர்ஜி.

இந்தியாவின் கருத்து
பூட்டான்-சீனா ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, இந்த ஒப்பந்த நகர்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. சீனாவுடன் பூட்டான் 1984-ம் ஆண்டு முதல் எல்லை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதை அறிவோம் என பட்டும்படாமலும் கூறியிருக்கிறார். இருந்த போதும், பூட்டான் தற்போது கடைபிடித்து வரும் நடுநிலைப் போக்கை ஒருவேளை மீறினால் இந்தியா தனது உக்கிரமுகத்தைக் காட்டத்தான் வேண்டும் இல்லையெனில் இலங்கையைப் போல சீனாவுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் என்கின்றனர் பாதுகாப்பு ஆய்வாளர்கள்.












Click it and Unblock the Notifications