கால்வன் பள்ளத்தாக்கு முழுவதையும் உரிமை கோரி மீண்டும் சீண்டுகிறது சீனா - நள்ளிரவில் அறிக்கை!
டெல்லி: லடாக் கிழக்கில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று சீனா மீண்டும் உரிமை கோரியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
கால்வன் (கல்வான், கல்வன்) பள்ளத்தாக்குப் பகுதி இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கிறது. ஆனால் இப்பகுதிக்கு சீனா திடீரென உரிமை கோரியது.

இதனால் எழுந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 43 சீனாவின் வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனாவின் தாக்குதல், ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் கொந்தளித்து கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல டெல்லியில் உள்ள சீனா தூதரகம், சீனா வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையை நள்ளிரவில் வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையில், ஜூன் 6-ந் தேதி இந்திய ராணுவ வீரர்களே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை தாண்டி சீனா வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் 15-ந் தேதியும் இந்திய ராணுவ வீரர்களே அத்துமீறி தங்கள் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதனால்தான் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன என அதில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அந்த அறிக்கையில் ஒட்டுமொத்த கால்வன் பள்ளத்தாக்கு பகுதியும் சீனாவுக்கே உரிமை என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த பகுதியில் சீனா ராணுவத்தினர் பல ஆண்டுகாலமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications