கொரோனா கிடக்குது.. புதுரூட் வழியாக இந்தியாவில் இருந்து சீனாவுக்கு 265 டன் சரக்கரை ஏற்றுமதி!
டெல்லி: கொரோனா பரவல் தொடர்பாக உலக நாடுகளை சீனா பெரும் அச்சத்தில் தள்ளிவிட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் இந்தியாவின் எல்லைகளில் சீனா அத்துமீறலுக்காக, ஊடுருவலுக்காக படை குவிப்பை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சிகளை முறியடிப்பதில் நமது ராணுவம் தீவிரம் காட்டுகிறது. இந்த நிலையில் புதிய சரக்கு பாதை வழியாக இந்தியாவில் இருந்து சீனாவுக்கு 265 டன் சர்க்கரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
நமது எல்லைகளில் சீனா ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டு வருவது தொடர் கதைதான். அண்மையில் அருணாச்சல பிரதேச எல்லையில் தவாங் செக்டாரில் சீன ராணுவ வீரர்கள் 300க்கும் மேற்பட்டோர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றனர். சீனாவின் இந்த அத்துமீறலை நமது ராணுவ வீரர்கள் தீரமுடன் முறியடித்தனர். இதனால் சீன ராணுவத்தினர் தங்களது நிலைகளுக்கே திரும்பி ஓடினர்.

இந்த பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விவாதிக்க முன்வர வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் லடாக் பிராந்தியத்தில் சீனாவுடன் இந்திய ராணுவம் பேச்சுவார்த்தை நடத்தியும் உள்ளது. இந்தியா - சீனா ராணுவ உயர் கமாண்டர் நிலையிலான அதிகாரிகள் பங்கேற்ற 17-வது சுற்றுப் பேச்சுக்கள் சீனத்தரப்பில் சுசுல் - மால்டோ எல்லைப் பகுதியில் நடைபெற்றது. கடந்த ஜூலை 17, 2022 அன்று நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில், மேற்குப் பகுதியின் எல்லைக்கோட்டில் நிலவும் சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருதரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். மேற்கு பகுதியில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பது என்று இருதரப்பினரும் அப்போது ஒப்புக்கொண்டனர். ராணுவம் மற்றும் தூதரக நிலையில், இருதரப்பும் தொடர்ந்து பேச்சுக்களில் ஈடுபடுவது என்று அப்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த பின்னணியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிஉச்சமாக பரவி வருகிறது என செய்திகள் வெளியாகி உள்ளன. சீனாவில் பிஎப்7 என்ற உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தி உள்ளது; இன்னும் 3 மாதங்களில் சீனாவின் 60% மக்கள் கொரோன வைரஸால் கடுமையாக பாதிக்கப்படுவர்; சீனாவில் பல லட்சம் பேர் கொரோனா வைரஸால் உயிரிழப்பர் என்றெல்லாம் எச்சரிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண நிலையைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து சீனாவுக்கு 265 டன் சரக்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக ரயில் மற்றும் கடல் மார்க்கமாக சீனாவுக்கு சர்க்கரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது புதிய வர்த்தகப் பாதையாக சீனா கருதுகிறது.
நமது நாட்டின் மும்பை, சீனாவின் ச்சின்ச்சோ துறைமுகம், லன்ச்சோ ஆகியவற்றை இணைக்கக் கூடிய புதிய மேற்கு தரை-கடல் பாதை இது என கருதப்படுகிறது.சீனாவின் வடமேற்கு பகுதிக்கு சர்க்கரையை இறக்குமதி செய்வதற்கான புதிய வழித்தடம் என்கின்றன சீன ஊடகங்கள். இந்தியாவின் சர்க்கரை இந்த புதிய வழித்தடம் மூலம் சீனாவின் கன்சூ மாநிலத்துக்கு ஏற்றிச் செல்லப்பட்டது இதுவே முதல் முறை என்கின்றன சீன அரசாங்க ஊடக செய்தி நிறுவனங்கள்.












Click it and Unblock the Notifications