ஒன்றுக்கே அலறிய சீனா.. வேகமெடுத்தது இந்தியா.. லடாக்கில் ரூ.20,000 கோடியில் சாலைகள்!
டெல்லி: இந்தியாவின் சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக்கில் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலை பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அனைத்து சாலை பணிகளையும் விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லடாக் தனியூனியன் பிரதேசமாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு திட்ட பணிகளை மத்திய அரசு விரைவு படுத்தி வருகிறது.
அண்மையில் லேவில் இருந்து சீன எல்லை வரை துர்புக்-ஷியோக்-தௌலத் பேக் ஓல்டிக்கு 200 கிலோமீட்டருக்கு சாலைகள் அமைக்கப்பட்டன. இந்த சாலையை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த இரு மாதங்களுக்கு முன்பே திறந்து வைத்தார்.
சீனா ஆதிக்கம் செய்ய விடமாட்டோம்.. இந்தியாவுக்கு அமெரிக்க ராணுவம் துணை நிற்கும்- வெள்ளை மாளிகை அதிரடி
சீனா ஆத்திரம்
இதன்பிறகு தான் சீனா, இந்தியாவுடன் பிரச்னையில் இறங்க ஆரம்பித்தது. ஏற்கனவே லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக அறிவித்ததை எதிர்த்த சீனா, சாலை பணிகளை கண்டு மேலும் ஆத்திரம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாகவே கால்வான் பள்ளத்தாக்கில் ஆக்கிரமிப்பு செய்தது. அதன்பின்னர் மோதல்கள் வெடித்தது.
சாலைகளை மேம்படுத்துதல்
இந்நிலையில் சீனாவுடன் எல்லையை பகிரும் பகுதிகளான கிழக்கு லடாக்கில் சாலை இணைப்பை மேம்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. அந்த சாலை திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முக்கியமான பகுதி
ஏனெனில் துர்புக் மற்றும் நியோமா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சாங்தாங் ஏரியா மிகவும் முக்கியமானது. கால்வான், சுஷுல், ஷியோக், டெம்சோக் மற்றும் சுமூர் போன்ற முக்கியமான பகுதிகள் துர்புக் மற்றும் நியோமாவின் கீழ் வருவதால் அங்கு தரமான சாலைகளை விரைவாக அமைக்க அரசு வேகம் காட்டி வருகிறது.
நல்ல சாலை அவசியம்
ஜம்மு காஷ்மீர் பகுதியில் எல்லை சாலைகள் அமைப்பு தான் லே, தோயிஸ், கார்கில் மற்றும் டிபிஓ ஆகிய இடங்களில் விமானநிலையங்களையும் பராமரித்து வருகிறது. இந்த அமைப்புதான் பல்வேறு சாலைப்பணிகளை தற்போது செய்து வருகிறது.நல்ல சாலை இணைப்பு இருந்தால் தான் இராணுவம் மற்றும் எல்லைப் பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு ஊக்கமளிக்கும் என்பதால் திட்டங்கள் விரைவுப்படுத்தப்படுகிறது.
விரைவாக அமைக்க உத்தரவு
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) அதிகாரிகளுடன் சாலை கட்டுமானங்களை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அதிகாரிகளிடம் சாலை உள்கட்டமைப்பு குறுகிய காலத்தில் மேம்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
20 ஆயிரம் கோடியில் சாலைகள்
சாலை கட்டுமானங்களைத் தவிர, சீனா எல்லையை ஒட்டிய உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ள பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 30 பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் உட்பட சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை உள்கட்டமைப்பு பணிகள் செய்யப்படுகின்றன. அண்மையில் திறக்கப்பட்ட சீனா பிரச்சனைக்கு காரணமாக துர்புக்-ஷியோக்-தௌலத் பேக் ஓல்டிசாலையின் ஒரு பகுதியும் மேம்படுத்தப்பட உள்ளது.