US Tariff: "கொஞ்சம் இடம் கொடுத்தால் இந்த அராஜகவாதி.." இந்தியாவுக்கு ஆதரவாக வந்த சீனா.. டிரம்ப் மீது பாய்ச்சல்
டெல்லி: இந்தியாவுக்கு டிரம்ப் 50% வரியை அறிவித்துள்ளது இரு நாட்டு உறவை ஆபத்தில் தள்ளியுள்ளது. இந்தியா மீதான நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவிலேயே பல்வேறு தலைவர்களும் எம்பிக்களும் கூட டிரம்பின் இந்த நடவடிக்கையைச் சாடியுள்ளனர். இதற்கிடையே இப்போது திடீரென சீனாவும் இந்த விவகாரத்தில் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து, அமெரிக்காவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது.
இந்தியா அமெரிக்கா இடையேயான கடந்த பல ஆண்டுகளாகவே நல்லுறவு இருந்து வந்தது. ஆனால், டிரம்ப் இப்போது அதை காலி செய்யும் வகையிலேயே செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் இறுதியில் இந்தியாவுக்கு எதிராக டிரம்ப் முதலில் 25% வரிகளை அறிவித்தார். அந்த பரபரப்பு ஓய்வதற்குள்ளாகவே இந்தியாவுக்கு மேலும் 25% வரிகளை டிரம்ப் அறிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க வரி
இதன் மூலம் இந்தியாவுக்கான அமெரிக்க வரி 50%ஆக அதிகரித்தது. இந்தியா மீது நியாயமே இல்லாத வகையில் டிரம்ப் வரிகளை அறிவித்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். அமெரிக்காவிலேயே கூட பலரும் இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். டிரம்பின் நடவடிக்கை இந்தியா அமெரிக்கா உறவை ஆபத்தில் தள்ளுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே இப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் சீனாவும் இந்தியா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து, டிரம்பை விமர்சித்துள்ளது. இந்தியாவிற்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளைக் கடுமையாக விமர்சித்தார். பிற நாடுகளை ஒடுக்குவதற்கான ஆயுதமாக அமெரிக்கா வரிகளைப் பயன்படுத்துவதாக சூ ஃபெய்ஹாங் சாடியுள்ளார்.
கொஞ்சம் இடம் கொடுத்தாலும்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இந்த அராஜகவாதிக்கு சிறிதளவு இடமளித்தாலும், முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்வார்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார். அவர் மேலும், "பிற நாடுகளை ஒடுக்குவதற்கான ஆயுதமாக வரிகளைப் பயன்படுத்துவது ஐக்கிய நாடுகள் சாசனத்தை மீறுவதோடு, உலக வர்த்தக அமைப்பின் விதிகளைச் சிதைக்கிறது. இது மக்களால் விரும்பப்படாத மற்றும் அதிக காலம் நீடிக்க முடியாத செயல்" என்று சாடியுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுனும் டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் வரிகளைத் தவறாகப் பயன்படுத்துவதாக விமர்சித்த குவோ ஜியாகுன், வரிகளை இதுபோல தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதில் சீனா தெளிவாகவே உள்ளது என்று குவோ ஜியாகுன் தெரிவித்தார்.
எண்ணெய் நிலவரம்
ரஷ்ய எண்ணெய்யைப் பொறுத்தவரைக் கடந்த மாதம் அதிகபட்சமாகச் சீனா 47% வாங்கியுள்ளது. இந்தியா 38% எண்ணெய்யை வாங்கியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கி நாடுகள் 6 சதவிகிதம் கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளதாகப் பின்லாந்தைச் சேர்ந்த எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சிக்கான மையம் தெரிவித்துள்ளது.
உண்மை என்ன
சீனா, துருக்கி, அவ்வளவு ஏன் ஐரோப்பிய ஒன்றியம் கூட ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குகிறது. இருப்பினும், அந்த நாடுகளுக்கு டிரம்ப் எந்தவொரு வரியையும் அறிவிக்கவில்லை. மேலும், அமெரிக்காவே கூட ரஷ்யாவிடம் இருந்து சில பொருட்களை இறக்குமதி செய்கிறது. இதையும் நமது மத்திய அரசு சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருந்தது. இது தொடர்பான கேள்வியை டிரம்பிடமே செய்தியாளர்கள் எழுப்பினர். இருப்பினும், அது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது எனச் சொல்லி டிரம்ப் சமாளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications