சித்ரா ராமகிருஷ்ணன் - என்எஸ்இ மோசடி வழக்கு.. களத்தில் குதித்த சிபிஐ.. 10 நகரங்களில் அதிரடி ரெய்டு
டெல்லி: சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் என்எஸ்இ தொடர்பான வழக்கில் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது. மொத்தம் 10 நகரங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனராக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் 2013 முதல் 2016 வரை அந்த பதவியில் இருந்து கொண்டு பல்வேறு மோசடிகளை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. தேசிய பங்கு சந்தையின் தலைமை செயலதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா பங்கு சந்தை தகவல்களை இமயமலையில் இருந்த சாமியார் ஒருவரிடம் பகிர்ந்து உள்ளார்.
அதேபோல் அந்த சாமியார் கொடுத்த அறிவுரைகளை பின்பற்றி பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளார். பல்வேறு ரகசியங்களை இவர் அந்த சாமியாருக்கு பகிர்ந்ததாக புகார் வைக்கப்பட்டுள்ளது.

சாமியார்
ஆனந்த் சுப்பிரமணியத்தை விதிகளை மீறி இவர் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமனம் செய்ததாகவும் புகார் உள்ளது. இதில் செபி வைத்திருக்கும் முக்கிய குற்றச்சாட்டு என்றால், அந்த சாமியாரின் சொல் பேச்சை அப்படியே கேட்டு சித்ரா செயல்பட்டு இருக்கிறார். பங்கு சந்தை தகவல்களை முன் கூட்டியே பகிர்ந்து உள்ளார். சாமியாரின் தலையாட்டி பொம்மை போல சித்ரா செயல்பட்டதாகவும், சித்ரா சிஇஓ போல இல்லை. அந்த சாமியார்தான் சிஇஓ போல செயல்பட்டார் என்றும் செபி கூறியுள்ளது

மோசடி
இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில்தான் அந்த போலியான இமாலய சாமியார் ஆனந்த் சுப்பிரமணியன்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியனை சி.பி.ஐ., கைது செய்து சிறையில் அடைத்தது. இவர்களுக்கு சிபிஐ கோர்ட் ஜாமீன் வழங்கவில்லை.

தள்ளுபடி
கடந்த 12-ம் தேதி மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சித்ரா ராமகிருஷ்ணன் டெல்லி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று டெல்லி ஹைகோர்ட்டில் வந்தது. அப்போது சிபிஐ தரப்பு இதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ முன்னதாக சிபிஐ கோர்ட்டில் இவரின் ஜாமீன் மனுவை கடுமையாக எதிர்த்தது. இந்த நிலையில் இந்த முறையும் அவரின் ஜாமீன் மனுவை கடுமையாக எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சித்ரா ராமகிருஷ்ணன்
இந்த நிலையில்தான் தற்போது சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் என்எஸ்இ தொடர்பான வழக்கில் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது. மொத்தம் 10 நகரங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மும்பை, காந்தி நகர், டெல்லி, நொய்டா, குர்கிராம், கொல்கத்தா ஆகிய நகரங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மோசடியில் தொடர்பு உடையதாக கருதப்படும் நிறுவனங்கள், நபர்கள், சில அலுவலகங்களில் சோதனை நடக்கிறது. சித்ரா ராமகிருஷ்ணன் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications