டெல்லி நேரு பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் வாக்கிங்..செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்..வீடியோ டிரென்ட்
டெல்லி: டெல்லியில் நேரு பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது அங்கு வந்த மக்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Recommended Video
டெல்லியில் திமுக தலைமை அலுவலக திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக டெல்லிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். அங்கு கடந்த வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
சுமார் அரை மணி நடந்த இந்த சந்திப்பின் போது முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கான 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தார். அந்த கோரிக்கைகளின் முக்கியத்துவத்தையும் பிரதமரிடம் விளக்கினார்.

அமித்ஷா
இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து துறை சார்ந்த கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். நேற்றைய தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த அவர், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
பின்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அவருடன் டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளை முதல்வர் கெஜ்ரிவாலுடன் இணைந்து பார்வையிட்டார். இந்த நிலையில் இன்று காலை நேரு பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த மக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கை குலுக்கி அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

உடல்நலனில் அக்கறை
முதல்வர் ஸ்டாலின் தனது உடல்நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் அவ்வப்போது அவர் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்கள் வைரலாகும். அதில் அவரது வயதுக்கு மிகவும் கடினமான உடற்பயிற்சிகளை பார்க்கும் போது அதை பார்ப்போருக்கு உடல் நலம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

ஈசிஆரில் சைக்கிளிங்
சென்னையில் தினந்தோறும் உடற்பயிற்சியை செய்யும் முதல்வர் ஸ்டாலின் மாதத்தில் இரு முறை அல்லது மூன்று முறை ஈசிஆர் சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொள்வார். அப்போதும் அவரை காணும் மக்கள் அவருடன் செல்பி எடுப்பார்கள், முதல்வரும் அவர்களிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிவார். டெல்லி சென்ற நிலையிலும் முதல்வர் ஸ்டாலின் விடாமல் நடைப்பயிற்சி மேற்கொண்டது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications