“உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது”; நீதித்துறையை விளாசிய கபில் சிபல்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், இன்றைய மக்களவை விவாதத்தில் உச்சநீதிமன்றத்தை காங்கிரஸ் மூத்த தலைவரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் வரும் 12ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கபில் சிபல், "உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது" எனக்கூறியள்ளார்.
முன்னதாக இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, விடைபெற உள்ள குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு புகழாரம் சூட்டினார்.
இதனையடுத்து மக்களவையில் பேசிய கபில் சிபல், "உச்சநீதிமன்றத்தின் மூலம் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் உங்கள் எண்ணம் தவறானது என உணர்ந்துகொள்ள வேண்டிய நேரம் இது. கடந்த 50 ஆண்டுகளாக என்னுடைய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அனுபவத்திலிருந்து இதை கூறுகிறேன்" என அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பேசிய அவர், "ஒருவேளை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நீதிமன்றம் வழங்கினாலும், அந்த தீர்ப்பு கள யதார்த்தத்தை மாற்றிவிடாது" என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, "நான் உச்சநீதிமன்றத்தில் பங்கெடுத்து இந்த ஆண்டுடன் 50 வருடங்கள் முடிவடைகிறது. இந்த 50 ஆண்டுக்கால அனுபவத்திலிருந்து சொல்கிறேன். உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன். நீங்கள் முற்போக்கான தீர்ப்புகள் குறித்து பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால், அது களத்தில் அமல்படுத்தப்படுவதற்கு நிறைய வேறுபாடுகள் உள்ளன. உச்சநீதிமன்றம் உங்களுக்கான தனிமனித சுதந்திரத்தை உறுதி செய்துள்ளது. ஆனால், அமலாக்கத்துறையினர் திடீரென உங்கள் வீடுகளுக்கு புகுந்து ரெய்டு நடத்தலாம். அப்படியெனில் இந்த தனியுரிமை எங்கு போனது?" என கேள்வி எழுப்பினார்.
8 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. உங்க ஊர் இருக்கா செக் பண்ணுங்க
மேலும், குஜராத் கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் எம்பி எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டி விமர்சித்த கபில் சிபல், சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பாதுகாப்புப் படையினரால் 17 பழங்குடியினரை நீதிக்குப் புறம்பாகக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளிட்டவற்றையும் விமர்சித்தார். ஜாகியா ஜாஃப்ரியாவின் மேல் முறையீட்டு வழக்கை தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. இதில் ஜாகியா தரப்பில் கபில் சிபல் ஆஜராகியிருந்தார்.
அதேபோல மிகவும் சென்ஸ்டிவ்வான வழக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்றும், வழக்கின் தீர்ப்பின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை சட்டத்துறைக்கு முன்பே தெரிந்திருக்கும் எனவும் சிபல் குறிப்பிட்டுள்ளார். "உச்சநீதிமன்றம் குறித்து விமர்சிக்க எனக்கு விருப்பம் இல்லைதான். ஆனால் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் பேசவில்லையெனில் வேறு யார் பேசுவார்? யதார்த்தம் என்னவெனில் நமக்கு நன்கு தெரிந்த சர்ச்சைக்குரிய விஷயங்கள் சில குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்டு பின்னர் தீர்ப்பு வெளியாகிறது. குறிப்பிட்ட வழக்குகளை குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு என ஒதுக்கும் போது அதன் மூலம் நீதிமன்றம் சுதந்திரமாக செயல்பட முடியாது" என விமர்சித்த கபில்,
"நீதித்துறை இவ்வாறு இருக்கும்போது மக்கள் மனம் மாறாவிட்டால் நிலைமை மாறாது. நமது மக்கள் கருணை உள்ள சர்வாதிகாரம் என்கிற மனோநிலைக்கு வந்துவிட்டனர். சக்திவாய்ந்தவர்களின் கால்களில் மக்கள் விழுகிறார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. மக்கள் வெளியே வந்து தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கக் கோர வேண்டிய நேரம் வந்துவிட்டது. நமது சொந்த உரிமைகளுக்கா எழுந்து நின்று அதற்காக போராடும்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும்" என சிபல் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.