ஜே.என்.யூ. துணைவேந்தரை நீக்க வேண்டும்- காங். உண்மை அறியும் குழு வலியுறுத்தல்
டெல்லி: ஜே.என்.யூ. வன்முறைகள் தொடர்பான அதன் துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் உண்மை அறியும் குழு வலியுறுத்தியுள்ளது.
டெல்லி ஜே.என்.யூவில் ஜனவரி 5-ந் தேதி மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் டெல்லி போலீசார், இடதுசாரி மாணவர்கள்தான் வன்முறைக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர். இதனை இடதுசாரி மாணவர் சங்க நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.

காங். குழு ஆய்வு
இந்நிலையில் ஜே.என்.யூ. வன்முறைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் 5 பேர் கொண்ட குழு நேரில் சென்று ஆய்வு நடத்தியது. மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், எம்.பி. ஹிபி ஈடன், முன்னாள் ஜேஎன்யூ காங். மாணவர் தலைவர் சையன் அன்வர் ஹூசைன், டெல்லி பல்கலைக் கழக காங். முன்னாள் தலைவர் அம்ரிதா தவான் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு செய்தது.

பணி நீக்கம் செய்ய வேண்டும்
ஜே.என்.யூ. மாணவர்கள், பேராசிரியர்களிடம் இக்குழு விசாரணை நடத்தி பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஜே.என்.யூ. வன்முறைகள் தொடர்பாக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை பணி நீக்கம் செய்ய வேண்டும். ஜனவரி 5-ந் தேதி வன்முறைகள் தொடர்பாக உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்.

முறைகேடுகள் தொடர்பான விசாரணை
ஜெகதீஷ் குமார் 2016-ம் ஆண்டு ஜனவர் 27-ந் தேதி துணைவேந்தராக பொறுப்பேற்றார். அவரது பணிகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும். மேலும் அவரது பணி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நிதி, நிர்வாக முடிவுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.

கிரிமினல் விசாரணை
சபர்மதி, பெரியார் விடுதிகளில் மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பான கிரிமினல் விசாரணை நடத்த வேண்டும். ஜே.என்.யூ. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

டெல்லி போலீசார் மீது புகார்
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அழைத்தும் பாதுகாப்புக்கு வர மறுத்த டெல்லி போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்திருக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு காங்கிரஸ் உண்மை அறியும் குழு பரிந்துரைத்துள்ளது.












Click it and Unblock the Notifications