டெல்லியையே காலி செய்யும் பிரியங்கா.. அதிரடியாக லக்னோவில் குடியேறுகிறார்-உ.பி.யில் கேம் ஸ்டார்ட்
டெல்லி: மத்திய அரசு உத்தரவைத் தொடர்ந்து டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்ய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முடிவெடுத்துள்ளார். டெல்லி பங்களாவை காலி செய்யும் பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் குடியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மகள் என்ற அடிப்படையில் எஸ்பிஜி பாதுகாப்பு பெற்றிருந்த பிரியங்கா காந்திக்கு 1997-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி டெல்லி லோதி சாலையில் அரசு பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு வாடகையாக மாதம் ரூ37,000 செலுத்தி வந்தார் பிரியங்கா காந்தி.
அண்மையில் முன்னாள் பிரதமர்களின் குடும்பத்துக்கான எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதனடிப்படையில் சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோருக்கான பாதுகாப்பும் வாபஸ்பெறப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் பிரியங்கா காந்திக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி அரசு பங்களாவை உடனடியாக காலி செய்யுங்கள்.. பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவு!
காலி செய்யும் பிரியங்கா
ஆகஸ்ட் 1-ந் தேதிக்குள் இந்த பங்களாவை பிரியங்கா காந்தி காலி செய்ய வேண்டும்; வீட்டு பராமரிப்புகள் உள்ளிட்டவைகளுக்காக ரூ3.46 லட்சம் பிரியங்கா காந்தி செலுத்த வேண்டும் என்றும் ஆகஸ்ட் 1-ந் தேதிக்குப் பின்னர் பிரியங்கா காந்தி அந்த பங்களாவில் வசித்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசின் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
லக்னோவுக்கு ஷிப்ட்
இதனிடையே டெல்லி லோதி பங்களாவை காலி செய்வது என பிரியங்கா முடிவு செய்திருக்கிறாராம். இதனை தொடர்ந்து டெல்லியில் வேறு ஒரு பங்களாவில் குடியேறுவது இல்லை என்றும் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் குடியேறலாம் எனவும் பிரியங்கா காந்தி திட்டமிட்டிருக்கிறாராம். உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருப்பதால் லக்னோவில் குடியேறினால் கட்சிப் பணிகளை தீவிரமாக முன்னெடுக்க முடியும் என்பது பிரியங்காவின் கணக்காம்.
உபி சட்டசபை தேர்தல் இலக்கு
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு 2022-ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தல்களில் உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி முழு வீச்சில் தேர்தல் பணி செய்த போதும் காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுக்கவில்லை. இந்த நிலைமையை மாற்றும் வகையில் லக்னோவிலேயே குடியேறிவிடலாம் என்பது பிரியங்காவின் எண்ணமாம்.
லக்னோ கவுல் பங்களா
லக்னோவில் இந்திரா குடும்பத்துக்கு சொந்தமான கவுல் பங்களாவில்தான் பிரியங்கா குடியேற உள்ளாராம். லக்னோவுக்கு செல்லும் போது பிரியங்கா காந்தி இந்த பங்களாவில்தான் தங்குவாராம். இப்போது இதே பங்களாவிலேயே குடியேறுவது என பிரியங்கா திட்டமிட்டிருக்கிறாராம். இருப்பினும் குடும்பத்துடன் குடியேறுகிறாரா? என்பது தெளிவாக தெரியவில்லை என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
இனிதான் கேம் ஸ்டார்ட்
அண்மையில் லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இடம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆயிரக்கணக்கான பேருந்துகளை ஏற்பாடு செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக அரசை கதிகலங்க வைத்தவர் பிரியங்கா காந்தி. இப்போது உத்தரப்பிரதேசத்திலேயே டேரா போட்டு அரசியல் செய்ய முடிவு செய்திருக்கிறார் எனில் இனிதான்யா கேம் ஸ்டார்ட் என்று புளகாங்கிதம் அடைகின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.