மணிப்பூர் பிரச்சனையில் சத்தீஸ்கர், ராஜஸ்தானை கோர்த்துவிடுவதா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்!
டெல்லி: மணிப்பூர் பிரச்சனையில் காங்கிரஸ் ஆளும் சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்ள இருக்கும் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களையும் சேர்த்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மணிப்பூரில் குக்கி இனப்பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சி நாட்டையே பெரும் வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. நாட்டின் மனசாட்சியை உலுக்கி எடுக்கிற இந்த கொடூரம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக கருத்து தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி, நான் உங்கள் மத்தியில் வந்து இந்த ஜனநாயகத்தின் கோவிலின் அருகே நிற்கும்போது, என் இதயம் வலியால், கோபத்தால் நிறைந்துள்ளது. எத்தனை பாவிகள் இருக்கிறார்கள், அவர்கள் இடத்தில் யார் இருக்கிறார்கள், ஆனால் நாடு முழுமைக்கும் அவமானம் நடக்கிறது, 140 கோடி நாட்டு மக்கள் வெட்கப்பட வேண்டும். அனைத்து முதல்வர்களும் தங்கள் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்த வேண்டும், குறிப்பாக நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்ததா, சத்தீஸ்கரில் நடந்ததா, மணிப்பூரைச் சேர்ந்ததா? இந்த நாட்டில், இந்தியாவின் எந்த மூலையிலும், எந்த மாநில அரசிலும், சட்டம் ஒழுங்கின் முக்கியத்துவம், பெண்களுக்கு மரியாதை, எந்த குற்றவாளியும் தப்ப முடியாது என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். சட்டம் அதன் முழு பலத்துடன் ஒன்றன்பின் ஒன்றாக அடி எடுத்து வைக்கும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்ததை ஒருபோதும் மன்னிக்க முடியாது என கூறியிருந்தார்.
பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கும் போது, இந்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்ததா, சத்தீஸ்கரில் நடந்ததா, மணிப்பூரைச் சேர்ந்ததா? என கேள்வி எழுப்பி இருந்ததுதான் இப்போது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த இரு மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக தாங்கள் ஆளும் மாநிலங்களின் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பிரதமர் மோடி எத்தனையோ முறை சத்தீஸ்கர் மாநிலம் வருகை தந்துள்ளார்; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எத்தனையோ முறை சத்தீஸ்கர் மாநிலம் வருகை தந்துள்ளார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பதாக ஒருபோதும் குறிப்பிட்டது இல்லையே.. தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி இப்படி மணிப்பூருடன் ஒப்பிட்டு விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.












Click it and Unblock the Notifications