எதிர்ப்பு அலையை சமாளிக்க முடியல.. அதனால்தான் பஞ்சாப்பில் தோற்றுவிட்டோம்.. காங்கிரஸ் விளக்கம்
டெல்லி: பஞ்சாப்பில் காங்கிரஸ் சார்பில் நான்கரை ஆண்டுகளாக முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் மீதான எதிர்ப்பு அலையால் தான் நாங்கள் தோல்வி அடைந்தோம். இந்த எதிர்ப்பு அலையை எங்களால் சமாளிக்க முடியவில்லை'' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவால் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பிப்ரவரி 14ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இன்று ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் கருத்து கணிப்புகள் கூறியபடி துவக்கம் முதலே ஆம்ஆத்மி கட்சி முன்னிலை வகித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ், ஆட்சியை பிடிக்க போராடிய பாஜக கட்சிகளுக்கும் கடும் பின்னடைவு ஏற்பட்டது.

முதல்வர்கள் தோல்வி
பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி துவங்கி பாஜக கூட்டணியுடன் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் தேர்தலில் தோல்வி அடைந்தார். இவர் பதவி விலகிய பிறகு புதிய முதல்வராக பொறுப்பேற்ற சரண்ஜித் சிங் சன்னியும் காங்கிரஸ் சார்பில் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் தேர்தலில் வெற்றி பெறவில்லை. இது பஞ்சாப் மட்டுமின்றி இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து செல்வாக்கு சரிந்து வருவதை காட்டுகிறது.

எதிர்ப்பு அலையால்...
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டெல்லியில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பஞ்சாப்பில் மண்ணின் மைந்தன் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. ஆனால் அங்கு நான்கரை ஆண்டுகாலமாக முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் மீதனா எதிர்ப்பு அலையை மீறி எங்களால் வரமுடியவில்லை. இதனால் பொதுமக்கள் ஆம்ஆத்மி கட்சிக்கு ஓட்டளித்துள்ளனர். மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்று கொள்கிறோம்'' என்றார்.

காங்கிரஸ் மீது வெறுப்பு
பஞ்சாப்பை சட்டசபை தேர்தலை பொறுத்தமட்டில் காங்கிரஸ் தனித்து களம் இறங்கியது. அம்ரீந்தர் சிங் கட்சியில் இருந்து விலகிய பிறகு முதல்வராக பொறுப்பேற்ற சரண்ஜித் சிங் சன்னி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிடிக்கவில்லை. இதனால் கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டது. மேலும் அம்ரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினாலும் அவர் மீதான வெறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு மைனஸாகி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தாக்கம் இல்லா கூட்டணி
இதேபோல் பல ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்த சிரோண்மணி அகாலிதளம் கட்சி இந்த முறை கூட்டணியில் இருந்து வெளியேறியது. இந்த கட்சி பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதனால் பாஜக, கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் எஸ்ஏடி (சன்யூக்த்) கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் இறங்கியது. இந்த கூட்டணிகளும் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

முன்னிலை என்ன
இன்று மாலை 5 மணி நிலவரப்படி 37 இடங்களில் வெற்றி பெற்ற ஆம்ஆத்மி இன்னும் 54 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் 15 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. எஸ்ஏடி 2 இடங்கிலும், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

ஆம்ஆத்மியின் ஆட்சி
இதன்மூலம் பஞ்சாப்பில் தனித்து போட்டியிட்ட அரவிந்த கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் தனிப்பெரும்பான்மையுடன் அந்த கட்சி ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பஞ்சாப் முதல்வராக ஆம்ஆத்மியின் பகவந்த் மான் பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications