பேஸ்புக்- வாட்ஸ் ஆப்-பாஜக தொடர்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த காங். வலியுறுத்தல்
டெல்லி: சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகியவற்றுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்குமான தொடர்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த விசாரணைகள் முடியும் வரை பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் தலைவரை இடைநீக்கம் செய்யவும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பேஸ்புக், வாட்ஸ் ஆப், பாஜக ஆகியவை இடையே என்ன தொடர்புகள் இருந்தன என்பது தொடர்பாக நாடாளுமன்ற இரு சபைகளின் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமங்கள் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக கிரிமினல் விசாரணையும் மேற்கொள்ள வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் தலைவரை அப்பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்க வேண்டும்.
இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு தகவல் தொழிநுட்ப நிறுவனங்களின் அனைத்து செயல்பாடுகளும் ஆராயப்பட வேண்டும். இந்த விசாரணைகள் முடியும் வரை பேஸ்புக் குழுமத்தின் இந்தியா தலைவரை இடைநீக்கம் செய்யவும் வேண்டும். இவ்வாறு ஆதிர் ரஞ்சன் செளத்ரி கூறினார்.
முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகெர்பெர்க்குக்கு அனுப்பிய கடிதத்தில், பேஸ்புக் இந்திய குழுமத்தினர் மீது என்ன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன? என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்பது குறித்து விளக்கம் கேட்டிருந்தார்.
இந்தியாவில் பேஸ்புக் நிறுவனமானது பாரதிய ஜனதா கட்சிக்கும் மத்திய அரசுக்கும் ஆதரவாக செயல்பட்டு வருவதை வெளிநாட்டு ஊடகங்கள் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலும் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பும்.












Click it and Unblock the Notifications