18 நாட்களாக நடந்தவைகள் பற்றி விவாதிக்கணும்.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் கோரிக்கை
டெல்லி: கடந்த 7 ஆம் தேதி முதல் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வந்த மோதல் இன்று முடிவுக்கு வந்துள்ளது. இன்று மாலை 5.00 மணி முதல் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், நிறுத்தி கொள்வது என இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டது. சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 18 நாட்களாக நடந்த நிகழ்வுகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கிய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதலை நடத்த முயற்சித்தது.

இந்த தாக்குதலை இந்தியா தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் வெற்றிகரமாக முறியடித்தது. எல்லையில் ஷெல் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியும் கொடுத்தது. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 7 ஆம் தேதி முதல் நடந்து வந்த மோதல் இன்று முடிவுக்கு வந்துள்ளது. இன்று மாலை 5.00 மணி முதல் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், நிறுத்தி கொள்வது என இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இருநாட்டு ராணுவ அதிகாரிகள் தரப்பில் வரும் 12 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பேசுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டை நிறுத்தம் அறிவித்ததையடுத்து எல்லையில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.
சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், கடந்த 18 நாட்களாக நிலவிய சூழல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை மத்திய அரசு உடனே கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கவும் சிறப்புக் கூட்டம் தேவை என வலியுறுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications