ஸ்டிக்கர் டூ போட்டோஷூட்! மோடி திறந்துவிட்ட “சிறுத்தைகள்”.. அவருக்கு எதிராகவே திருப்பிவிட்ட காங்கிரஸ்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தில் தனது பிறந்தநாளன்று திறந்துவிட்ட ஆப்பிரிக்க சிறுத்தைகள் தொடர்பான பேச்சை, பாஜகவுக்கு எதிராகவே திருப்பி விட்டுள்ளது காங்கிரஸ்.
பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்தநாள் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பாஜகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரில் 15 நாட்களுக்கு பாரதிய ஜனதா கட்சி கொண்டாடி வருகிறது. அக்டோபர் 2ஆம் தேதி வரை 15 நாட்களும் பாஜக கொண்டாடுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய பிரதேசம் மாநிலம் குனோ தேசிய பூங்காவிற்கு சென்றார். அங்கு ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட 8 சிறுத்தைகளில் 3 சிறுத்தைகளை திறந்து விட்டார்.
வெடித்தது பஞ்சாயத்து.. சிவிங்கி புலிகள் இந்தியாவில் நீண்டகாலம் வாழாது- சூழல் ஆர்வலர்கள் வார்னிங்!
சிறுத்தைகள்
சீட்டா வகை சிறுத்தைகள் இந்தியாவில் அழிந்துவிட்ட நிலையில் அந்த இனத்தை சேர்ந்த சிறுத்தைகளை மோடி திறந்துவிட்டுள்ளார். ஆனால் இந்த சிறுத்தைகளை திறந்துவிடுவதற்கு முன்பிருந்தே அவருக்கு எதிராக இதை வைத்து விமர்சனங்கள் எழுத் தொடங்கின. குறிப்பாக கேமரா மூடியை திறக்காமல் மோடி படம் பிடித்ததாக கூறியது தொடங்கி, காங்கிரஸின் சிறுத்தை திட்டத்துக்கு பாஜக ஸ்டிக்கர் ஒட்டுகிறது என்பது வரை ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன.
ஜெய்ராம் ரமேஷ்
பிரதமர் மோடி கொண்டு வந்த இந்த சிறுத்தை விவகாரத்தை அவருக்கு எதிராகவே திருப்பி விட்டுள்ளது காங்கிரஸ். இதுகுறித்து முன்னாள் மத்திய வன அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், 2008 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு சிவிங்கி வகை சிறுத்தைகள் கொண்டு வர திட்டமிட்டப்பட்டு ஒப்புதல் தரப்பட்டது. கடந்த 2010 ல் தென்னாப்பிரிக்காவுக்கு நான்ன் நேரில் சென்று சிறுத்தைகளை பார்த்துவந்தேன். தற்போது அந்த பெயரை பாஜக தட்டிச்செல்கிறது." என விமர்சித்தார்.
மல்லிகார்ஜூன் கார்கே
பிரதமர் நரேந்திர மோடி திறந்துவிட்ட சிறுத்தைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மல்லிகார்ஜுன் கார்கே ட்விட்டரில் பதிவிட்டதாவது, "வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், வறுமை, பசி, வகுப்புவாதம், வெறுப்புணர்வு, வன்முறை, ஒடுக்குமுறை ஆகிய எட்டு சிறுத்தைகளும் மோடி அரசால் கொண்டு வரப்பட்டு இந்திய மக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன." என்றார்.
ராகுல் காந்தி பேச்சு
இதுகுறித்து கேரளாவில் ஒற்றுமை யாத்திரையின்போது பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "மதம், மொழி ரீதியாக நாட்டை உடைக்க பிரிக்கிறார்கள். சிறுத்தைகளை இங்கு கொண்டு வந்து திறந்துவிடுவதை பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதேபோல் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் வேலையின்மை விகிதம் சரிவு ஆகியவற்றின் மீதும் பிரதமர் நரேந்திர மோடி கவலைப்பட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.