நாளை தொடங்கும் பயணம்.. 2022ல் உ.பியின் முதல்வர் வேட்பாளர்.. ஆரம்பிக்கிறது பிரியங்கா அரசியல்!
பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி சார்பாக நாளை நடக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
டெல்லி: பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி சார்பாக நாளை நடக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின்பாக அவர் உத்தர பிரதேச தேர்தல் பணிகளை கவனிக்க இருக்கிறார் என்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு இது செகண்ட் இன்னிங்க்ஸ் என்றுதான் கூற வேண்டும். இந்த முறை உத்தர பிரதேசத்தில் புதிய ஒப்பனருடன் களமிறங்குகிறது காங்கிரஸ்.
உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் அரசியல் வருகையை காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். இவர் எப்போது தேர்தலை பணிகளை தொடங்குவார் என்று காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
நாளை தொடக்கம்
இந்த நிலையில் நாளை காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மாநாட்டில் பிரியங்கா காந்தி கலந்து கொள்கிறார். டெல்லி காங்கிரஸ் தலைமை செயலகத்தில் இந்த மாநாடு நடக்கிறது. அதன்பின் மாநில தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின் உத்தர பிரதேச தேர்தல் பணிகளை நாளையில் இருந்து துவங்குகிறார்.
கங்கை நதி
உத்தர பிரதேசம் சென்ற கும்பமேளாவில் கங்கை நதியின் நீராடிய பின் இவர் தேர்தல் பணிகளை கவனிப்பார். அடுத்த வாரமே மிகப்பெரிய தேர்தல் கூட்டத்திற்கு இவர் ஏற்பாடு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரின் முதல் தேர்தல் மாநாட்டை பார்க்க இப்போதே உத்தர பிரதேச மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
சூப்பர் பாஸ்
பொதுவாக பிரியங்கா காந்தி இத்தனை நாட்களாக தீவிர அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் கூட, உத்தர பிரதேசத்தில் நடக்கும் தேர்தலில் மட்டும் பிரச்சாரம் செய்து வந்தார். பிரியங்கா என்றால் இந்திரா காந்தி என்றுதான் உத்தர பிரதேச மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் பிரியங்காவின் அரசியல் வருகை காங்கிரசை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்லும் என்றும் கூறுகிறார்கள்.
என்ன திட்டம்
இந்த நிலையில் 2022ல் உத்தர பிரதேசத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலிலும் இவரை முன்னிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. அதாவது இவரை உத்தர பிரதேசத்தில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வருகிறது. இதுகுறித்து எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம்.