ராகுல் கணக்கு முடக்கம்.. டிபி மாற்றி போராட்டத்தில் குதித்த காங் கட்சியினர்.. ட்விட்டருக்கு எதிர்ப்பு
டெல்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பலர் ட்விட்டரில் டிபி மற்றும் பெயர் மாற்றி போராடி வருகிறார்கள். ராகுல் காந்தியை முடக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் பெயரை ராகுல் காந்தி என்று மாற்றி உள்ளனர்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட டெல்லி சிறுமியின் குடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்டதற்காக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் கணக்கு லாக் செய்யப்பட்டு இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இவரின் குடும்பத்தாரை சந்தித்து கடந்த வாரம் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார். இவர்களை சந்திக்கும் வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாக இவரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கணக்கு
சிறுமியின் பெற்றோரின் அடையாளத்தை வெளிப்படுத்தியது தவறு, இதனால் ராகுல் காந்தி மீது போக்ஸோ சட்டம் மற்றும் சிறார் நீதி சட்டம் ஆகிய இரண்டு சட்டங்களின் கீழ் எப்ஐஆர் பதிய வேண்டும் என்று மாக்ராந் சுரேஷ் என்பவர் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதில் நேற்று பதில் அளித்த ட்விட்டர் நிறுவனம், ராகுல் காந்தியின் அந்த குறிப்பிட்ட வீடியோ ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. அதோடு ராகுல் காந்தியின் கணக்கும் லாக் செய்யப்பட்டுவிட்டது என்று ட்விட்டர் நிறுவனம் கூறியது.

முடக்கம்
ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு லாக் செய்யப்பட்டதை தொடர்ந்து தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமும் இன்று லாக் செய்யப்பட்டது. ராகுல் காந்தியின் வீடியோவை பகிர்ந்ததாக கூறி அந்த கணக்கு லாக் செய்யப்பட்டது. அதோடு காங்கிரஸ் கட்சியின் கூற்றுப்படி மொத்தம் 5 ஆயிரம் காங்கிரஸ் உறுப்பினர்களின் கணக்குகளும் இதே காரணத்திற்காக லாக் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

கொதிப்பு
இது தொடர்பாக இன்ஸ்டராகில் போஸ்ட் செய்து இருந்த காங்கிரஸ் கட்சி, மோடி ஜி உங்களுக்கு இவ்வளவு பயமா? ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.. இந்திய சுதந்திரத்திற்காக காங்கிரஸ் கட்சி போராடியது. ஆயுதங்கள் இன்றி அகிம்சை முறையில், உண்மையை ஆயுதமாக ஏந்தி, மக்களின் உத்வேகத்துடன் போராடியது. அப்போது காங்கிரஸ் வென்றது, மீண்டும் வெற்றிபெறும் என்று அந்த போஸ்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

போராட்டம்
இந்த நிலையில் தற்போது ட்விட்டரில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் இது தொடர்பாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் தங்கள் டிபியில் ராகுல் காந்தியின் புகைப்படத்தை வைத்து ட்விட் செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் ராகுல் காந்தி என்று தங்கள் ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றி உள்ளனர்.

ராகுல் காந்தி
காங்கிரஸ் இளைஞரணி தேசிய தலைவர் ஸ்ரீனிவாஸ் தனது பெயரை ட்விட்டரில் ராகுல் காந்தி என்று மாற்றி உள்ளார். அதோடு ராகுல் காந்தியின் புகைப்படத்தை வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பலர் ராகுல் காந்தியின் புகைப்படத்தை பயன்படுத்துவதை போராட்ட வடிவமாக மாற்றியுள்ளனர். ட்விட்டர் நிறுவனம் பாரபட்சத்தோடு செயல்படுவதாகவும், அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் வைத்துள்ளனர்.

பிரியங்கா காந்தி
தனது ட்விட்டரில் பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தி புகைப்படத்தை வைத்து போராட்டத்தில் இறங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள ட்விட்டில், ட்விட்டர் நிறுவனம் தனது சொந்த விதிகளை பின்பற்றுகிறதா அல்லது பாஜகவின் விதிகளை பின்பற்றி எங்களின் கணக்குகளை முடக்குகிறதா? எஸ்.சி கமிஷன் இதே புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில், அந்த கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காங்கிரஸ் கட்சியினரை மட்டும் குறி வைப்பது ஏன்?

வைரல்
காங்கிரஸ் கட்சியினரின் கணக்குகளை லாக் செய்வதன் மூலம் ட்விட்டர் நிறுவனம் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது. பாஜக அரசோடு சேர்ந்து கொண்டு இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக ட்விட்டர் நிறுவனமும் செயல்படுகிறது, என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications