துருக்கி பற்றி கேட்டதுமே.. பதில் சொல்லாமல் மைக்கை மாற்றிமாற்றி கொடுத்த காங்கிரஸ் தலைகள்..விமர்சனம்
டெல்லி: நம் நாட்டுடனான மோதலின்போது பாகிஸ்தானுக்கு நேரடியாக துருக்கி ஆதரவு அளித்தது. இதையடுத்து நம் நாட்டு மக்கள் துருக்கிக்கு சுற்றுலா செல்வதையும், அந்த நாட்டுடனான வர்த்தகத்தையும் தவிர்த்து வருகின்றனர். இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பவன் கேரா மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரிடம் கேட்டபோது இருவரும் பதில் சொல்ல மறுத்து ‛‛நீங்க சொல்லுங்க.. நீங்க சொல்லுங்க..'' என மைக்கை மாற்றி கொண்ட சம்பவம் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.
நம்நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் என்பது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நம் நாட்டின் அதிரடி தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாததால் பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய கெஞ்சியது. இதையடுத்து நம் நாடும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது.

இந்த மோதலின்போது பயங்கரவாதிகளை வளர்த்து விடும் பாகிஸ்தானுக்கும், வெளிப்படையாக 3 நாடுகள் ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. அதன்படி சீனா, துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தன. இந்த 3 நாடுகளும் எப்போதும் நம் நாட்டுக்கு எதிர் நிலைப்பாடு கொண்டவை என்பதால் பாகிஸ்தானுடன் கைகோர்த்துள்ளன.
இது நம் நாட்டு மக்களை கோபப்படுத்தி உள்ளது. இதனால் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை பொதுமக்கள் தவிர்க்க தொடங்கி உள்ளனர். அதேபோல் இருநாடுகளுடனான வர்த்தகத்தையும் நிறுத்தி வருகின்றன. பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து நம்மை எதிர்த்து வரும் துருக்கி, அஜர்பைஜானுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்படுத்தும் வகையில் நம் நாட்டு மக்கள் இந்த நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர்களான பவன் கேரா மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛துருக்கியை மக்கள் புறக்கணித்து வருகின்றனர். இதுபற்றி உங்களின் நிலைப்பாடு என்ன?'' என்று கேள்வி கேட்டனர். இந்த கேள்வியை கேட்டவுடன் ஜெய்ராம் ரமேஷ் தனது முன்பு இருந்த மைக்கை பவன் கேரா நோக்கி திருப்பி நீங்கள் பதில் சொல்லுங்கள் என்றார். அதற்கு பவன் கேரா மறுத்ததோடு, மைக்கை ஜெய்ராம் ரமேஷ் நோக்கி திருப்பி நீங்கள் பதில் சொல்லுங்கள் என்றார். ஆனால் அதனை ஜெய்ராம் ரமேஷ் ஏற்காமல் பவன் கேரா நோக்கி மீண்டும் மைக்கை திருப்பினார்.
இதையடுத்து பவன் கேரா, ‛‛இதுபற்றி நாங்கள் விரைவில் கருத்து தெரிவிக்கிறோம்'' என்று கூறி நிலைமையை சமாளித்தார். இந்த வீடியோவை பாஜகவின் ஐடி பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‛‛ துருக்கி மற்றும் அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததால் நம் நாடு கோபமடைந்துள்ளது. இந்த நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரசாரம் அதிகரித்து வருகிறது. இந்த நிலைப்பாட்டில் மக்கள் ஒற்றுமையை வெளிக்காட்டி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியால் நம் நாட்டு மக்களின் பரந்த உணர்வுகளுடன் ஒத்துப்போக முடியவில்லை. அவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து இல்லாமல் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications