அதிகாரிகள் கொடுத்த தகவல்.. திடீரென வயநாடு பயணத்தை ஒத்தி வைத்த ராகுல் காந்தி
டெல்லி: கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 120க்கும் மேற்ப்ட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாளை வயநாட்டிற்கு வருவதாக கூறியிருந்தார். ஆனால் தற்போது, மோசமான வானிலை காரணமாக வயநாட்டிற்கு நாளை வர இருந்த பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது. விரைவில் வயநாட்டிற்கு நான் வருவேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கடவுள் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் பெரும் துயரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள வயநாட்டில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வயநாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக மலைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.

ஏற்கனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று இரவும் அப்பகுதியில் கனமழை பெய்தது. இந்த நிலையில் தான் இன்று அதிகாலையில் இருமுறை அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் முண்டகை, மேட்டுப்பட்டி, சூரல்மலை உள்ளிட்ட 3 பகுதிகளில் இருந்த வீடுகள் மண்ணில் புதைந்தன. சூரல்மலை பகுதியில் அடுத்தடுத்த நிலச்சரிவு ஏற்பட்டதில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கின.
இந்த வீடுகளில் சிக்கிய 1,000-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகளில் கேரளா மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதில் இதுவரை 123-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இரு தமிழர்களின் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காளிதாஸ் மற்றும் கல்யாண்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். காளிதாஸ், கல்யாண்குமார் உடல்கள் வயநாடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரவிலும் மீட்பு பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். முன்னதாக வயநாடு நிலச்சரிவு சம்பவம் குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மீட்பு பணிகள் குறித்தும், மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு முழு உதவியை வழங்கும் என்றும் மோடி உறுதி அளித்தார். மேலும் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
இதேபோல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், வயநாடு தொகுதி முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தியும் கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இதேபோன்று வயநாடு ஆட்சியரையும் தொடர்பு கொண்டு மீட்பு பணி நிலவரங்களை ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நாளை வயநாடு வருவதற்கு திட்டமிட்டனர். இந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக ராகுல் காந்தி நாளை வயநாடு வரும் பயணத்தை மாற்றியுள்ளார். இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், "மோசமான வானிலை காரணமாக வயநாட்டிற்கு நாளை வர இருந்த பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது. விரைவில் வயநாட்டிற்கு நான் செல்வேன். இதற்கு இடைப்பட்ட காலத்தில் தேவையான அனைத்து உதவிகளும் நாங்கள் செய்வோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications