ஆட்டத்தை துவங்கும் சோனியா.. பட்ஜெட்டில் எழுப்பப்படும் பிரச்சனைகள் என்ன?.. சீனியர்களுடன் இன்று ஆலோசனை
சோனியா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தும் சோனியா காந்தி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கான வியூகம் வகுக்க உள்ளார்.. இதனால் எதிர்பார்ப்பு கூடிவருகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், 2022-23ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31-ந் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது.
2022-23ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாகவும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு
அதன்படி, ஜனவரி 31-ந் தேதியிலிருந்து பிப்ரவரி 11 வரை முதல் கட்டமாகவும், மார்ச் 14-ந்தேதியிலிருந்து ஏப்ரல் 8-ந்தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.. 2022-23 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ந்தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய போகிறார்.
ஒமிக்ரான்
சமீப காலமாக கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ளது.. ஒமைக்ரான் வைரஸ் என்ற புது தொற்றும் பீதியை ஏற்படுத்தி கொண்டு, அதன்மூலம் உயிரிழப்புகளும் அதிகரிக்க துவங்கி உள்ளது.. இந்த தொற்று பாதிப்புகள் அடுத்தடுத்த சிக்கலையும் இங்கு ஏற்படுத்தியுள்ளது... இதனால், நாட்டின் ஏற்றுமதி, விமான போக்குவரத்து, உள்நாட்டு உள்பத்தி உள்ளிட்ட துறைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன..
ஏழைகள்
அதனால், ஏழை எளிய மக்கள் முதல் தொழில் துறையினர் வரை எல்லா தரப்பினரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையிலேயே, வரப்போகும் மத்திய பட்ஜெட் 2022 இருக்கும் என்று அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன.. அதேசமயம், தனிநபர் வருமான வரி விகித மாற்றம் தொடர்பாக புதிய அறிவிப்புகள் எதையும் கடந்த பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவில்லை... ஆனால், நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கிறதென கடந்த பட்ஜெட்டின்போது அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எதிர்பார்ப்புகள்
அதேபோல, டிஜிட்டல் முறையில் முதன்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு ரூ. 3,768 கோடி ஒதுக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது...இப்படி பல விஷயங்களை பட்ஜெட்டில் எதிர்நோக்கி உள்ள நேரத்தில், காங்கிரஸ் கட்சி தன் தரப்பு ஆலோசனையை கூட்ட உள்ளது.. பட்ஜெட் கூட்டத்தொடரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று வியூகங்களை வகுக்க உள்ளார்.. இதற்காக பாராளுமன்ற வியூகம் வகுக்கும் குழுவின் கூட்டத்தையும் சோனியா காந்தி கூட்டியுள்ளார்.
கூட்டம்
சோனியா தலைமையிலான இந்த குழுவில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மூத்த தலைவர்கள் ஏகே அந்தோணி, கேசி வேணுகோபால், ஆனந்த் சர்மா, கவுரவ் கோகாய், கே.சுரேஷ், ஜெயராம் ரமேஷ், மாணிக்கம் தாகூர், ரவ்நீத்சிங் பிட்டு உள்ளிட்டேர் இடம்பெற்றுள்ளனர்...
கூட்டம்
இவர்களில் பெரும்பாலானோர் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த கூட்டம் நடக்க உள்ளது.. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள், பின்பற்ற வேண்டிய நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து மூத்த தலைவர்களுடன் விவாதித்து சோனியாகாந்தி வியூகம் வகுக்க உள்ளதையும், சோனியா சமீபகாலமாக ஒதுங்கியிருந்த நிலையில், தற்போது இந்த ஆலோசனை கூட்டத்தை கூட்டி விவாதிக்க உள்ளதையும், பாஜக இதை உற்று கவனித்து வருகிறது.