ராஜஸ்தான் காங்கிரசில் உட்கட்சி பூசல்.. சோனியா எடுத்த அதிரடி முடிவு.. உடனே விரைந்த குழு.. செம பிளான்!
டெல்லி: இந்தியாவின் பாரம்பரியமிக்க கட்சியான காங்கிரசையும், உட்கட்சி பூசலையும் எப்போதும் பிரிக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலமாக இருந்தாலும் சரி, ஆட்சி செய்யாத மாநிலமாக இருந்தாலும் சரி காங்கிரசில் உட்கட்சி பூசல் நிலவுவதை பார்ப்பது, மற்ற கட்சிகளுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் பழகி விட்டது.
இதற்கு பஞ்சாப் மாநில காங்கிரசில் சமீபத்தில் நடந்த கூத்துக்களை மிக உதாரணமாக கூறலாம். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், கட்சியின் மூத்த தலைவரான நவஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பெரும் பனிப்போரே வெடித்தது.
பாஜகவில் இருந்த சித்து, அக்கட்சியில் இருந்து விலகி 2016-ம் ஆண்டில் காங்கிரசுக்கு தாவினார். அடுத்த ஒரு ஆண்டில் 2017-ம் ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். கூடவே மாநில சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சர் என்ற பதிவையும் கிப்ட்டாக கிடைத்தது.
கோவாக்சின், கோவிஷீல்ட்... தடுப்பூசி மிக்சிங் பரிசோதனைக்கு நிபுணர் குழு ஒப்புதல்
சித்து- அமரீந்தர் சிங் மோதல்
2019-ல் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது சுற்றுலா வளர்ச்சித்துறையை பறித்து, சித்துவுக்கு பிடிக்காத துறையில் அவருக்கு அமைச்சர் பதிவு ஒதுக்கினார் அமரீந்தர் சிங். இங்கிருந்துதான் பிரச்சினை ஆரம்பமானது என்று கூறலாம். தனக்கு பிடிக்காத பதவியை தூக்கிபோட்ட சித்து, முதல்வர் அமரீந்தர் சிங்கை வெளிப்படையாக தாக்கி பேச தொடங்கினார். கூடவே கட்சியில் தனக்கு செல்வாக்கும் வளர்த்து கொண்டார்.
சோனியா சமாதானம்
அதன்பின்பு இருவரும் டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டத்தை தொடங்கினார்கள். இங்கு சசிகலா அணி, இ.பி.எஸ் என்று பிரிந்தது போல் அங்கு சித்து அணி, அமரீந்தர் சிங் அணி பிரிந்து செயல்பட தொடங்கினார்கள். குறிப்பாக கடந்த 6 மாதங்களாக உள்கட்சி பூசல் தீவிரமாக வெடித்ததால் சோனியா காந்தி இருவரையும் கூப்பிட்டு சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் வருவதால் இருவரும் சேர்ந்து இருப்பது முக்கியம் என்று அவர்களிடம் சுட்டிக்காட்டினார் சோனியா.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
அதன்பின்பு சித்துவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பை கொடுத்து அவரை சரிக்கட்டினார். சோனியாவின் அறிவுரையை காதில் ஏற்றிய அமரீந்தர் சிங்கும், சித்து பதவியேற்பு விழாவில் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார். பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக நடந்த தேநீர் விழாவில் சிந்துவும், அமரீந்தர் சிங்கும் நீண்ட நாள்களுக்கு பிறகு காதலர்கள் போல் மனம் விட்டு பேசிய பிறகுதான் சோனியா காந்திக்கு சற்று நிம்மதி பிறந்தது.
ராஜஸ்தானில் புதிய பிரச்சினை
இப்போதுதான் பஞ்சாப் பிரச்சினை ஓய்ந்திருக்க ராஜஸ்தான் காங்கிரசில் புதிய பிரச்சினை உருவெடுத்துள்ளது. ராஜஸ்தான் காங்கிரசை பொறுத்தவரை கடந்த ஆண்டு நடந்த மோதல் இந்த நாடே அறியும். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார். ராகுல் காந்தி குட் புக்கில் இடம் பிடித்தவரும், துணை முதல்வராக இருந்தவருமான சச்சின் பைலட் முதல்வர் பதவியை எதிர்பார்த்தபோது அவருக்கு கிடைக்கவில்லை.
கடந்தகால வரலாறு
மேலும், முதல்வர் அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். கூவத்தூர் ரிசார்ட் போல் அங்கும் தனது தரவு எம்.எல்.ஏ.க்களை தங்க வைத்து ஆட்சி கவிழ்ப்புக்கு முயற்சி செய்தார். ஆனால் பெரும்பான்மையை நிரூபித்ததால் அசோக் கெலாட் முதல்வர் பதிவியை தக்க வைத்துக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் தலைமை, சச்சின் பைலட்டிடம் இருந்து துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதிவியை பறித்தது.
பனிப்போர் நீடிக்கிறது
ஒரு கட்டத்தில் சச்சின் பைலட் பாஜக பக்கம் ஐக்கியமாக போவதாக தகவல்கள் பரவின. இதனை அறிந்து கொண்ட சோனியா அண்ட் ராகுல் அன் கோ சச்சின் பைலட்டிடம் சமாதானமாக பேசி அவரை தக்க வைத்தனர் . இந்த நிகழ்வு நடந்த ஒரு ஆண்டுக்கு பின்பும் சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே இன்னும் பனிப்போர் நீடித்து வருகிறது. ''கட்சி தலைமை உத்தரவிட்ட போதிலும், கெலாட் தன்னையும், தனது ஆதரவாளர்களையும் ஓரம் கட்டுகிறார்'' என்று ராகுலுக்கும், சோனியாவுக்கும் செய்தி அனுப்பினார் சச்சின்.
சோனியா எடுத்த முடிவு
பஞ்சாப்பை போல் இதற்கும் நிரந்தர முடிவு கட்ட திட்டமிட்டார் சோனியா. இதனால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணு கோபால், காங்கிரஸ் மூத்த தலைவரும் அஜய் மக்கானை உடனடியாக ராஜஸ்தானுக்கு அனுப்பி வைத்தார். வேணு கோபாலும், அஜய் மக்கானும் முதல்வர் அசோக் கெலாட்டை கடந்த வாரம் சந்தித்து பேசினார்கள். மேலும், சச்சின் பைலட்டுடனும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், ராஜஸ்தான் அமைச்சரவையை மாற்றி அமைக்கவும் வேணு கோபால், அஜய் மக்கான் முடிவு செய்தனர்.
எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை
இந்த நிலையில் ராஜஸ்தான் அமைச்சரவையை மாற்றுவது குறித்து கருத்து கேட்கும் வகையிலும், உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வரும் விதமாகவும் நேற்று முன்தினம் அஜய் மக்கான் எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்கு விரைவில் பதில் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களிடம் வைக்கப்பட்ட கேள்விகள் பின்வருமாறு:-
அடுக்கடுக்கான கேள்விகள்
1. உங்கள் மாவட்டதில் அமைச்சர்களின் செயல்திறன் எப்படி இருக்கிறது? அமைச்சர்கள் மீது உங்களுக்கு ஏதாவது புகார் இருக்கிறதா?
2. அரசு திட்டங்கள் எப்படி நடக்கிறது? திட்டங்களை மக்களிடம் சேர்க்க நன்றாக வேலை செய்கிறார்களா இல்லையா?
3. அமைச்சரவை சீரமைப்புக்கு பிறகு அரசு எப்படிசெயல்பட வேண்டும்? உங்களுக்கு ஏதேனும் ஆலோசனை இருக்கிறதா?
4. உங்கள் சட்டசபை தொகுதியில் இருப்பவர்களுக்கு பதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறதா?
5. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்புக்கு யாரையாவது பரிந்துரை செய்ய விருப்பம் உள்ளதா?
6.அரசிடமிருந்தோ அல்லது கட்சியிடமிருந்தோ உங்களுக்கு ஏதேனும் புகார் இருக்கிறதா?
மேற்கண்ட இந்த கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கும்படி எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
பதவி இழக்க கூடும்
அமைச்சரவை விரிவாக்கத்தில் முழுக்க, முழுக்க டெல்லி தலைமையின் தலையீடுதான் இருக்கும் என்றும் முதல்வர் அசோக் கெலாட் தலையீடு இருக்காது என்றும் தகவல்கள் கூறுகின்றன. அமைச்சரவை விரிவாக்கத்தில் முக்கிய அமைச்சர்கள் பதவி இழக்க போகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மாநில கல்வி அமைச்சரும், மாநிலத் தலைவருமான கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா பதவி இழக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.
பிரச்சினை முடிவுக்கு வருமா?
மேலும், சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியையும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியையும் மீண்டும் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. அமைச்சரவை விரிவாக்கம் செய்த பிறகு உட்கட்சி பூசல் இருக்காது என்று காங்கிரஸ் தலைமை நினைக்கிறது. ராஜஸ்தானில் உட்கட்சி பூசல் முடிவுக்கு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.