பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பகீர்- திமுகவுக்கு அதிர்ச்சி
டெல்லி: பொருளாதாரத்தின் அடிப்படையில் பின் தங்கிய அனைத்து ஜாதியினருக்குமே கல்வி, வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்சையாகி உள்ளது.
ஜாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்கப்பட வேண்டும் என்பதுதான் இடஒதுக்கீட்டின் அடிப்படை அம்சம். ஜாதி என்கிற கட்டமைப்பு இருக்கும் வரை இடஒதுக்கீடு என்பதும் இருந்தே தீரும் என்பதுதான் சமூக நீதித் தலைவர்களின் வலியுறுத்தல்.

இடஒதுக்கீடு என்பது 50% என்ற உச்சவரம்புக்கு மேலே போகக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கவனமாக 69% இடஒதுக்கீட்டை அரசியல் சாசனத்தின் பாதுகாப்புடன் வெற்றிகர்மாக செயல்படுத்தி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் பலனடைந்தும் வருகின்றனர். இதனால்தான் இந்தியாவிலேயே தமிழ்நாடு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது.
அதேநேரத்தில் ஜாதிய அடிப்படையில் இல்லாலம் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற வலதுசாரி கோரிக்கைகள் நீண்டகாலமாக பேசுபொருளாகவும் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது இப்படி ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இது சமூக நீதிக்கு எதிரானது என்பதால் எம்ஜிஆர் இதனைக் கைவிட்டார்.
ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இது மிகப் பெரும் சர்ச்சையாகவும் கடும் எதிர்ப்புக்குள்ளானதாகவும் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு இந்த பொருளாதார அடிப்படையிலான உயர் ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதும் இல்லை. இந்த சர்ச்சை இன்னமும் முடியவில்லை.

இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உயர்ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீடு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், பொருளாதாரத்தில் பின் தங்கிய Economically Weaker Sections (EWS) அனைத்து ஜாதி சமூகங்களுக்கும் பாகுபாடில்லாமல் கல்வி வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டு நடைமுறையில் இருக்கும் போதே பொருளாதார் அடிப்படையிலும் 10% இடஒதுக்கீடு வழங்குவோம் என்கிறது காங்கிரஸ். இது சமூக நீதி பேசக் கூடிய திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications