வாக்கு திருட்டு குற்றச்சாட்டு.. பிரமாண்ட பேரணியை முன்னெடுத்த காங்கிரஸ்! டெல்லியில் குவிந்த தலைவர்கள்
டெல்லி: பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் துணை போவதாகவும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு முறைகேடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பான விவகாரங்களை முன்னிறுத்தி, காங்கிரஸ் கட்சி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பேரணியை நடத்துகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இந்த பேரணியில் உரையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான விவாதம் நடந்தது. வாக்குத் திருட்டு என்பது மிகப் பெரிய தேச விரோத செயல் என்று ராகுல் காந்தி மக்களவையில் பாஜகவை கடுமையாகச் சாடினார்.
இதனை தொடர்ந்து இந்தப் பேரணி நடைபெறுகிறது. பிரியங்கா காந்தி வதேரா, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சச்சின் பைலட் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் பேரணியில் பங்கேற்க உள்ளனர். முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், தெலுங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டியும் இந்த பேரணியில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேரணியில் பங்கேற்க நேற்று ஜம்முவிலிருந்து 1,027 காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் புறப்பட்டிருந்தனர்.
பேரணிக்கு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் கேசவ் மஹ்தோ கம்லேஷ் கூறினார். இந்த நிகழ்ச்சியை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று வர்ணித்த கம்லேஷ், ஜார்க்கண்ட் முழுவதிலும் இருந்து கட்சித் தலைவர்கள், பணியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஏற்கனவே டெல்லிக்கு பெருமளவில் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த பேரணி குறித்து காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால், "தேர்தல்களை நடத்துவதற்கு இந்த நாட்டில் நடுநிலையான நடுவர் இல்லாதநிலை உள்ளது. இது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது. அதனால்தான் நாங்கள் ஒரு முழுமையான பிரச்சாரத்தையும், இயக்கத்தையும் மேற்கொண்டு வருகிறோம். ஐந்து கோடி கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கான பணிகளை நாங்கள் தொடங்கியுள்ளோம்.
நாடாளுமன்றத்திலும், இந்த வாக்குத் திருட்டு விவகாரம் குறித்து விவாதித்தோம். எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் நேரடியான பரிந்துரைகளை வழங்கியுள்ளார். நாங்கள் விமர்சிப்பது மட்டுமல்லாமல், தெளிவான பரிந்துரைகளையும் வழங்குகிறோம். EVM இயந்திரங்கள் குறித்து பல புகார்கள் உள்ளன. எனவே எங்கள் பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்பார்கள்." என்று வேணுகோபால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications