வியூகத்தை மாற்றிய காங்கிரஸ்.. கழற்றி விடப்படும் கம்யூனிஸ்டுகள்! மேற்கு வங்க அரசியலில் மாற்றம்!
டெல்லி: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கும் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சி, வரவிருக்கும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள அனைத்து 294 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சி.பி.ஐ (எம்) தலைமையிலான இடதுசாரி முன்னணி, திரிணாமுல் காங்கிரஸ் என எந்தக் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இல்லை என்பதையும் கட்சித் தலைமை தெளிவுபடுத்தியது.

முக்கிய கூட்டம்
இந்த முடிவு, டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் இல்லத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, மேற்கு வங்க பொறுப்பாளரும் பொதுச் செயலாளருமான குலாம் அகமது மிர் இதை அறிவித்தார்.
கூட்டத்தில், தற்போதைய மாநிலத் தலைவர் சுவங்கர் சர்க்கார், முன்னாள் தலைவரும் 5 முறை மக்களவை எம்.பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மற்றும் மேற்கு வங்கத்தின் ஒரே காங்கிரஸ் மக்களவை உறுப்பினரான இஷா கான் சவுத்ரி ஆகிய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கருத்தில் கொண்டு முடிவு
கார்கே, மிர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட தேசிய அளவிலான பிற காங்கிரஸ் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
குலாம் அகமது மிர் கூறுகையில், "மேற்கு வங்கத்தில் கூட்டணி அல்லது தொகுதிப் பங்கீடு குறித்த எங்களது கடந்த கால அனுபவங்கள், களத்தில் உள்ள கட்சித் தொண்டர்களைப் பெரிதும் பலவீனப்படுத்தின. மாநில காங்கிரஸ் தலைவர்கள் உட்பட அனைவருடனும் விவாதித்த பிறகு, காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து 294 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கும்" என்றார்.
தொகுதி பங்கீடு
இடதுசாரி முன்னணி கூட்டணியில் ஆர்வமாக இருந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தனித்துப் போட்டியிடுவது கட்சி மேலிடத்தின் முடிவு என்றார். "கட்சி மேலிடம் எடுத்த முடிவுப்படி, இந்த முறை நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம்" என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடக்கத்திலிருந்தே சாத்தியமற்றது என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஏன் கூட்டணி சாத்தியமில்லை?
2016 முதல் இடதுசாரி முன்னணிக்கும் காங்கிரஸுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டை வடிவமைத்த முதன்மைச் சிற்பிகள், மறைந்த சி.பி.ஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மேற்கு வங்க முன்னாள் தலைவரும் 5 முறை மக்களவை எம்.பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரிதான்.
தற்போது யெச்சூரி மறைந்த பிறகு, சி.பி.ஐ(எம்) மத்திய தலைமையில் காங்கிரஸுடன் ஒரு ஒப்பந்தத்திற்குத் தலைமையைப் பேசவைக்கும் ஒரு தேசியத் தலைவர் கூட இல்லை. சவுத்ரி கட்சியின் முக்கிய முடிவெடுக்கும் வட்டாரத்தில் இருந்து வெளியேறிய பின்னர், காங்கிரஸிலும் கம்யூனிஸ்டுகளிடம் பேச ஆள் இல்லை. எனவேதான் கூட்டணி சாத்தியமில்லாமல் போனது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications