நான் ஃபிராடுனா.. நீங்க மெகா ஃபிராடு! கெஜ்ரிவால் மீது சுகேஷ் சந்தர் பரபர குற்றச்சாட்டு! பகீர் கடிதம்
டெல்லி: தற்போது கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள சுகேஷ் சந்திரசேகர் தனது புதிய கடிதத்தில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் குறித்து சில அதிர்ச்சி குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.
தமிழ்நாட்டு அரசியலில் சுகேஷ் சந்திரசேகர் என்ற பெயர் கிட்டத்தட்ட அனைவருக்கும் நினைவில் இருக்கும். அதிமுகவில் பிளவுபட்டு இருந்த போது, இரட்டை இலை சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியது.
அப்போது, டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது.. இந்த சுகேஷ் மூலமே டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆம் ஆத்மி
இவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் உள்ளன. குறிப்பாகச் சிறையில் இருந்து கொண்டே ரூ200 கோடி மோசடி செய்ததும் தெரிய வந்தது. அப்போது எப்படி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாரோ அதேபோல இப்போது டெல்லி அரசியலில் பரபரப்பைக் கிளப்பி வருகிறார். டெல்லி சிறையில் சொகுசாக இருக்க டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மாதம் ரூ 10 கோடி லஞ்சம் கொடுத்ததாகக் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

பரபர கடிதம்
இதற்கிடையே டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அவர் எழுதியுள்ள புதிய கடிதத்தில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவாலையே நேரடியாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சத்யேந்தர் ஜெயின் மற்றும் திகார் சிறையின் முன்னாள் டிஜி தன்னை மிரட்டுவதாகவும் அவர் மற்றொரு கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.. அந்தக் கடிதத்தில், 2015 முதல் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலை தனக்குத் தெரியும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மெகா ஃபிராடு
மேலும் அவர் அந்தக் கடிதத்தில், "தென்னிந்தியாவில் ஆம் ஆத்மி கட்சியில் எனக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்கள். இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் ரூ. 50 கோடி வரை அளித்தேன். கெஜ்ரிவால், நாட்டிலேயே நான் தான் மிகப் பெரிய ஏமாற்றுக்காரன் என்கிறார். பிறகு ஏன் என்னிடம் இருந்து 50 கோடி பெற்றுக்கொண்டு ராஜ்யசபா சீட் கொடுத்தீர்கள்? அது உங்களை மெகா ஏமாற்றுக்காரனாக மாற்றவில்லையா?" என்று அதில் கூறியுள்ளார்.

500 கோடி
சில அதிர்ச்சி குற்றச்சாட்டுகளையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சுகேஷ் சுமத்தியுள்ளார். அதாவது தேர்தல் காலத்து நிதிக்காக 20-30 பேரைக் கட்சிக்கு அழைத்து வந்து 500 கோடி ரூபாய் வரை திரட்ட கட்டாயப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டினார். சுகேஷ் சந்தர் ஆம் ஆத்மி மீதும் அதன் தலைவர் மீதும் குற்றஞ்சாட்டியுள்ள புகார்கள் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

விளக்கம்
இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை கெஜ்ரிவால் முழுமையாக மறுத்துள்ளார். இதனிடையே பிரபல ஆங்கில ஊடகத்திடம் இது குறித்த பேசிய கெஜ்ரிவால், "குஜராத்தின் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்கள் பாஜக மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதைத் திசைதிருப்பவே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications