முழு லாக்டவுன் பற்றி யோசிங்க...மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்
டெல்லி : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 3000 ஐ கடந்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இன்று மத்திய, மாநில அரசுகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவில், டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க 2 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசகளுடன் இணைந்து அவரச காலத்தை சமாளிக்கும் அளவிற்கு ஆக்சிஜன் இருப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மாநிலங்களில் போதிய அளவு ஆக்சிஜன் வைத்துக் கொள்ளும் அளவிற்கு அடுத்த 4 நாட்களில் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
எந்த ஒரு நோயாளிக்கும் மருத்துவமனை அல்லது அத்தியாவசிய மருந்துகள் மறுக்கப்படாத நிலை உருவாகும் வகையில் கொள்கை வகுக்க வேண்டும். இதற்காக 2 வாரங்களுக்குள் மாநில அரசுகளுக்கான தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
வழக்கின் அடுத்த விசாரணைக்குள் ஆக்சிஜன் இருப்பு, தடுப்பூசிகளின் விலை, அத்தியாவசிய மருந்துகளின் விலை போன்றவை மறு ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதிகரித்து வரும் கொரோனா பரவலின் தீவிரத்தை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும். மக்கள் நலன் கருதி முழு லாக்டவுனை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும்.
அது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமானால் அதை சமாளிக்க, லாக்டவுனை அமல்படுத்தும் முன் மாற்று வழிகளை கையாள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் மிக கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்துள்ளது.