ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு முடிவு.. மகளிர் இடஒதுக்கீடு விவாதத்தில் அமித்ஷா கூறிய தகவல்
டெல்லி: ''எதிர்க்கட்சிகள் மகளிர் இடஒதுக்கீட்டுக்கான சட்ட திருத்த மசோதாவை எதிர்க்கவில்லை, மாறாக மகளிர் இட ஒதுக்கீட்டையே எதிர்க்கின்றன. தொகுதி மறுவரையறையை எதிர்ப்பது என்பது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இடங்களை அதிகரிப்பதை எதிர்ப்பதாகும். 2026ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவை முடிவு செய்துள்ளது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் லோக்சபா தொகுதி மறுவரை செய்வது தொடர்பாக 3 மசோதாக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2026 (பெண்களுக்கான 33 இடஒதுக்கீட்டை நாடாளுமன்றம், சட்டசபையில் உறுதி செய்யும் மசோதா) மற்றும் மாநிலங்களுக்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 (Delimitation Bill) 2026 ஆகியவற்றை அறிமுகம் செய்தார். அதேபோல் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026-யை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார்.
அதன்பிறகு விவாதம் தொடங்கி நடந்தது. இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பதிலுரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: ''எதிர்க்கட்சிகள் மகளிர் இடஒதுக்கீட்டுக்கான சட்ட திருத்த மசோதாவை எதிர்க்கவில்லை, மாறாக மகளிர் இட ஒதுக்கீட்டையே எதிர்க்கின்றன. மகளிர் இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை 'இந்தியா' கூட்டணியைத் தவிர வேறு யாரும் எதிர்க்கவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் தொகுதி மறுவரையறையை எதிர்த்து வருகிறது. 'இந்தியா' கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அது, இது என்று கூறி மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்து வருகின்றன.
தொகுதி மறுவரையறைக்கு பின் பெண்களுக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், சரிக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்குவதற்காகவும் தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது. தொகுதி மறுவரையறையை எதிர்ப்பது என்பது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இடங்களை அதிகரிப்பதை எதிர்ப்பதாகும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சம பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காகவே தொகுதி மறுவரையறை செய்யப்படுகிறது. 1972ம் முதல் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தொகுதி மறுவரையறை முக்கியம்
140 கோடி மக்களின் மனதில் எந்த குழப்பமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் 2026ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்பதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். மேலும் அரசியலமைப்பில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு இல்லை. ஆனால் காங்கிரஸ் சமாதானப்படுத்தும் அரசியலை கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ் அரசு, இட ஒதுக்கீட்டுக் குழுக்களின் பணிகளை முடக்குவதோடு, அவர்களின் ஆலோசனைகளைப் புறக்கணித்தது
ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் நேரத்தை வீணடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதப்பட்டது. தொகுதி மறுவரையறை என்பது தென்மாநிலங்களுக்கு எதிரானது இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் தெற்கு VS வடக்கு என்று பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கின்றன. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தங்களின் வாக்குகள் இன்றி தோல்வியடைந்து விடும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ஆனால் மசோதாவை தோல்வியடைய விடமாட்டேன். '' என 'அட்டாக்' செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications