தேர்தல் பத்திரம்.. போக்கு காட்டும் எஸ்பிஐ! நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை தேதி அறிவிப்பு
டெல்லி: தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாக கூறி எஸ்பிஐ வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது குறித்த வழக்கு விசாரணை வரும் 11ம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திர நடைமுறை, வெளிப்படையானதாக இல்லை என்று கூறி சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. மட்டுமல்லாது அரசியல் கட்சிகள் வாங்கிய தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படி எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் உச்சநீதிமன்றம் வழங்கிய காலக்கெடு முடிந்த பின்னரும் எஸ்பிஐ வங்கி, உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) எனும் அமைப்பு, எஸ்பிஐக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோரி மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், "கடந்த 2019, ஏப்.12 முதல் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி ஒப்படைக்காததால், அதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். எஸ்பிஐ வங்கி வேண்டுமென்றே காலதாமதம் செய்துள்ளது" என்று 'ஏடிஆர்' சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கோரியிருந்தார்.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், "இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு முறையாக சரிபார்க்கப்பட்டு பட்டியலிடப்பட்டால், எஸ்பிஐ வங்கியின் கூடுதல் அவகாசம் கோரிய வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என்று என்று கூறியிருந்தார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எஸ்பிஐ வெளியிடும் ஆவணங்கள் பெரும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தி பெரும் விவாதங்களை கிளப்பும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வரும் 11ம் தேதி நீதிமன்ற அவதிமப்பு வழக்கு தொடர்பான விசாரணை தொடரும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
தேர்தல் பத்திரம் விளக்கம்: அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாகவோ, காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2017-18ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவித்தது.
இதனையடுத்து இது 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கி ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.
தடை உத்தரவு: 'தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும்' என்று கூறி தேர்தல் பத்திரங்களுக்கு பிப்ரவரி மாதம் 15ம் தேதி அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். மட்டுமல்லாது, இது தொடர்பான விவரங்களையும் வெளியிட மார்ச் 6ஆம் தேதி வரை அவகாசம் அளித்து ஸ்டேட் வங்கிக்கு உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை மார்ச் 13ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எஸ்பிஐ: ஆனால், தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜுன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும், அதாவது லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு கொடுக்கிறோம் என எஸ்பிஐ உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications