4 ஆயிரத்துக்குள் வந்த கொரோனா பாதிப்பு.. இந்தியாவுக்கு விடை கொடுக்கிறதா கொரோனா? மத்திய அரசின் அறிக்கை
டெல்லி : இந்தியாவில் இன்று மேலும் 3,614 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய பாதிப்பை விட சுமார் 600 என்ற எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதன் காரணமாக மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,29,87,875 ஆக உயர்ந்துள்ளது
2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக பாதிப்பு இருந்தது. இந்த வருடமும் கொரோனா 3வது அலை இந்தியாவில் திடீர் எழுச்சியைக் கண்டது
கடந்த ஜனவரி மாதத்தில் திடீரென தினசரி பாதிப்பு உச்சம் தொட்டது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட போதிலும் கடந்த அலைகளைப் போல உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படவில்லை. மேலும் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

கொரோனா 3வது அலை
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்றும் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவில் இன்று மேலும் 3,614 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய பாதிப்பை சுமார் 600 குறைவாக உள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 614 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,29,87,875 ஆக அதிகரித்துள்ளது.

89 பேர் உயிரிழப்பு
கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், இதன் காரணமாக கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,15,803 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 5,185 பேர் மீண்டுள்ளதாகவும், இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,24,31,513 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் தற்போது 40,559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,18,511 டோஸ்களும், இதுவரை 1,79,91,57,486 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் டோஸாக 96,84,62,514, இரண்டாவது டோஸாக 80,99,44,094 , முன்னெச்சரிக்கை டோஸ் அதாவது பூஸ்டர் டோஸாக 1,99,07,259 என்ற எண்ணிக்கையிலும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

புதிய பாதிப்பில்லை
இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 8,21,122 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 77,77,15,932 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிகவும் சரிந்து வருவதாகவும், ஏராளமான மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் ஒருவருக்கு கூட உறுதி செய்யப்படவில்லை எனவும் மத்திய அரசின் சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications