உஷார்! கொரோனா 3-வது அலை எந்த நேரத்திலும் தாக்கலாம்- இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை
டெல்லி: இந்தியாவில் கொரோனா 3-வது அலை எந்த நேரத்திலும் தாக்கக் கூடிய நிலை இருக்கிறது; அதனால் சுற்றுலா தலங்கள், யாத்திரைகள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை இப்போதுதான் குறைந்து வருகிறது. கொரோனா 2-வது அலையில் மிக மோசமான பாதிப்பை சந்தித்தது இந்தியா. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 37,676 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது.
உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை பரவத் தொடங்கிவிட்டது. இங்கிலாந்து, ரஷ்யா, கொலம்பியா, பிரேசிலில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் கொரோனா 3-வது அலை இந்தியாவை எந்த நேரத்திலும் தாக்கக் கூடும் என இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா 2-வது அலை
இந்திய மருத்துவர்கள் சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு இப்போதுதான் கொரோனா 2-வது அலையின் பேரழிவில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது. தலைவர்கள், மருத்துவர்களின் அதிதீவிரமான முயற்சிகள் பாராட்டுக்குரியது.

எந்த நேரத்திலும் கொரோனா 3-வது அலை
தொற்று பாதிப்புகளின் கடந்த காலங்கள், சர்வதேச நிலவரங்களின்படி கொரோனா 3-வது அலை என்பது தவிர்க்க முடியாதது. எந்த நேரத்திலும் கொரோனா 3-வது அலை இந்தியாவையும் தாக்கக் கூடும். இப்படியான சூழ்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு பொறுத்திருக்கலாம்
சுற்றுலாக்கள், யாத்திரைகள் என்பது எல்லாம் மக்களுக்கு அவசியமானதுதான். ஆனால் இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்.
Recommended Video

கொரோனா தடுப்பூசிகள்
கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளாமல் இப்படியான ஒன்று கூடல்களுக்கு அனுமதித்தால் கொரோனா 3-வது அலை அதிவேகமாக பரவ இவை காரணமாகிவிடும். கடந்த ஒன்றரை ஆண்டுகால படிப்பினைகள் மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது; கொரோனாவை தடுக்கும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவது ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு இந்திய மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications