உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 கோடியை தாண்டியது! இந்தியாவில் ஒரே நாளில் 4,200 பேர் பலி
டெல்லி: உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,03,17,950 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாள் மட்டும் கொரோனாவுக்கு 4,200 பேர் பலியாகி உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி பேரழிவை உருவாக்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகமே கொரோனாவால் முடங்கிப் போயுள்ளது.

16 கோடியை தாண்டியது
தற்போதைய நிலையில் உலகில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 கோடியைத் தாண்டி இருக்கிறது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,30,844 ஆகவும் உள்ளது. கொரோனாவின் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 13,80,51,868.

ஒருநாள் பாதிப்பு
உலக அளவில் இந்தியாவில்தான் ஒருநாள் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 3,48,529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,33,40,456 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒருநாள் மரணங்கள்
இந்தியாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,200 ஆக உயர்ந்திருக்கிறது. நாட்டின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,54,225. இந்தியாவில் தற்போதைய நிலையில் 37,09,557 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்களாகும்.

மாநிலங்கள் நிலவரம்
நாட்டில் மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 40,956 ஆக உள்ளது. கர்நாடகாவில் 39,510, கேரளாவில் 37,290, உத்தரப்பிரதேசத்தில் 20,445 ஆக ஒருநாள் பாதிப்பு உள்ளது.

தமிழகத்தில் பாதிப்பு
தமிழகத்தில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,272 ஆகும். தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா மரணங்கள் 298 ஆக இருந்தது. ஆந்திரா, மேற்கு வங்கம், டெல்லி மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு உச்சகட்டமாக இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications