கொரோனா துயரம்: நெஞ்சை பதற வைக்கும் டெல்லி.. பல லட்சக்கணக்கான பிற மாநிலத்தவர் இடம்பெயருவது தொடருகிறது
டெல்லி: கொரோனா லாக்டவுனை எதிர்கொள்ள முடியாமல் பல லட்சக்கணக்கான பிற மாநிலத்தவர் தலைநகர் டெல்லியைவிட்டு இடம்பெயருகிற காட்சிகள் பெரும்துயரைத் தருகின்றன.
Recommended Video
கொரோனா தொற்று நோயின் தாக்கத்தால் தொடக்கத்தில் மாநிலங்கள் தடை உத்தரவுகளை அமல்படுத்தின. பின்னர் பிரதமர் மோடி 21 நாட்கள் லாக்டவுனை அறிவித்தார். இந்த லாக்டவுனை தொடக்கத்தில் மக்கள் இயல்பாக எடுத்துக் கொண்டனர்.
லாக்டவுனின் மறுபக்கம்
ஆனால் ஒருநாள், 2 நாட்கள் என நாட்கள் நகர நகர லாக்டவுனின் துயரத்தை அவர்களால் மெல்ல மெல்ல உணர முடிந்தது. கையிருப்பாக பணமும் இல்லை.. கையிருப்பாக உணவுப் பொருட்களும் இல்லை.. பணத்துக்காக உழைக்க தயார்.. ஆனால் வேலை இல்லை.. இதனால் அடுத்த நேரத்து உணவுக்கு என்ன செய்வது? என்கிற பெரும் கேள்விகளுடன் பொழுதுகளை கழித்தனர் டெல்லியில் வாழும் பல லட்சக்கணக்கான பிற மாநில தொழிலாளர்கள்.
இடம்பெயர்ந்த லட்சம்பேர்
எத்தனை நாள் வெறுமையிலும் வறுமையிலும் வாடவும் வாழவும் முடியும்? எவரும் எங்கேயும் ஒன்று கூடி முடிவெடுக்கவில்லை.. காய்ந்த வயிற்றுடன் பிள்ளை குட்டிகளுடன் டெல்லி மண்ணில் சாவதைவிட சொந்த மண்ணுக்கே திரும்புவோம் என முடிவெடுத்தனர் பிற மாநில தொழிலாளர்கள்.. இப்படி ஒருவர் இருவர் அல்ல.. ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தன்னெழுச்சியாகவே தலைநகர் டெல்லியை விட்டு புறப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஈரக்குலை நடுங்குகிறது
என்னதான் தடை உத்தரவு அமலில் இருந்தாலும் வெறுங்கால்கள்.. தலையில் மூட்டையாக கட்டப்பட்டிருக்கும் வாழ்வாதாரத்துடன் பிஞ்சு குழந்தைகளுடன் கொதிக்கும் தார் சாலையில் உயிரை மட்டும் பிடித்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்லும் அந்த காட்சிகள் ஈரக்குலையை நடுங்க வைக்கின்றன..சொந்த தாயகத்தில் அகதிகளைப் போல துயரவாழ்வுக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டிருப்பதன் முன்னால் தடை உத்தரவுகள்தான் தகர்ந்து போயின.
எப்போது ஓயும் இந்த துயரம்?
இதனால் வேறுவழியே இல்லாமல் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தடை உத்தரவுகளை மீறி சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகின்றன. ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் இடம்பெயர்ந்துள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு போதுமானதாக இல்லை. பேருந்துகளின் கூரைகள் மீதும் உயிரை கையில் பிடித்தபடி சொந்த மண்ணுக்கு செல்லும் அவலத்தை காண முடிகிறது. இந்த மனிதப் பேரவலத்தைத்தடுக்க பெரும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாதது பெரும் வேதனைக்குரியது.