இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது..4வது அலைக்கு வாய்ப்பு?
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,72,547 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 3,962 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வைரஸ் பாதிப்புக்கு 26 பேர் உயிரிழந்தனர். மேலும், 2,697 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. பல கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் புது புது வேரியண்ட்கள் உருவாகி வருகின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் புதிதாக 3,962 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,72,547 ஆக உயர்ந்தது. புதிதாக 26 பேர் இறந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,677 ஆக உயர்ந்துள்ளது.

2,697 பேர் மீண்டனர்
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,697 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,25,454 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.05% ஆக குறைந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22,416 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,93,96,47,071 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 11,67,037 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள்
சென்னையில் 15 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

மகாராஷ்டிராவில் மாஸ்க் கட்டாயம்
கொரோனா அதிகரிப்பால் மகாராஷ்டிராவில் மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்யவும், தடுப்பூசிகளை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினசரி பரவல் அதிகரிப்பு
மகராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, தானே, புனே, நாசிக் ஆகிய நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 750க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர்.கொரோனா பாதிப்பிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 3,740ஆக உயர்ந்துள்ளது.

பரிசோதனையை அதிகரிக்கத் திட்டம்
மும்பையில் தற்போது தினமும் 8,000 பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை 30,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை அறிக்கையை நோயாளிகளுக்கு ஆய்வகங்கள் நேரடியாக வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ள மும்பை மாநகராட்சி பரிசோதனை அறிக்கையை முதலில் மாநகராட்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications