தென்னாப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள் நோயை கட்டுப்படுத்த உதவவில்லை: டாக்டர் ஷங்கர் ஷெட்டி
டெல்லி: தென்னாப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள் நோயைக் கட்டுப்படுத்த உதவவில்லை என்று டாக்டர் ஷங்கர் ஷெட்டி தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் இந்த தடுப்பூசிகள், கொரோனாவால் ஏற்படும் மிக மோசமான பாதிப்புகளை தடுக்கின்றன என்றும் டாக்டர் ஷங்கர் ஷெட்டி கூறியுள்ளார்.
இந்தியா டுடே டிவி நிகழ்ச்சியில் Doctors roundtable நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் ஷங்கர் ஷெட்டி கூறியதாவது:
தென்னாப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் மிக மெதுவாகவே நடைபெற்று வருகின்றன. தென்னாப்பிரிக்காவின் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் போதுமான அளவு பயன்தரவில்லை. இருந்த போதும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுதல் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கொரோனா முதல் அலை
தென்னாப்பிரிக்காவில் கொரோனா முதலாவது அலையைக் கட்டுப்படுத்த கடுமையான லாக்டவுன் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. ஆனால் சமூகத்தின் அனைத்து படிநிலைகளிலும் இந்த லாக்டவுன் கட்டுப்பாடுகளை ஒரே மாதிரியாக செயல்படுத்த முடிவதும் இல்லை. அப்போது சமூகத்தில் கீழ்தட்டு மக்களிடையே கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி இருந்தது. அந்த மக்கள் பொதுவாக தங்களை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த இயலாதவர்களாக இருந்தனர்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
இருப்பினும் கொரோனா 2-வது அலையின் போது தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான கறுப்பின மக்கள், கொரோனா தாக்குதலுக்குப் பின்னர் தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திருக்கின்றனர்.

தடுப்பூசிகள் என்ன செய்கிறது?
இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது நீண்டகாலம் நிலைத்திருக்குமா? என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். இந்த பின்னணியில் தற்போது பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக மீள் ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

வைரஸ் உருமாற்றம் காரணம்
உண்மையில், தென்னாப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவில்லை. ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளில் இருந்து மட்டும் பாதுகாத்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ்கள் உருமாறி இருக்கலாம் என கருதப்படுகிறது. இவ்வாறு டாக்டர் ஷங்கர் ஷெட்டி கூறினார்.












Click it and Unblock the Notifications