அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பயன்படுத்திய கொரோனா மருந்து இந்தியாவில் அறிமுகம்.. விலை ரூ. 59750
டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போது அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப்புக்கு அளிக்கப்பட்ட ஆன்டிபாடி காக்டெயில் மருந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு டோஸ் விலை ரூ.59,750 ஆகும்.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வர பல்வேறு மருந்து உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப்புக்கு அளிக்கப்பட்ட ஆன்டிபாடி காடெயில் மருந்தினை ரோச் இந்தியா மருந்து நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.
'கேஸிர்விர்மாப்', 'இம்டெவிமாப்' ஆகிய இரு மருந்துகளை ஒன்றாக கலந்து ஆன்டிபாடி காக்டெயில் மருந்தை அவசர கால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த 10ம் தேதி அனுமதி தந்தது.
இந்த மருந்து குறித்து ரோச் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ''ஆன்டிபாடி காக்டெயில் மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறோம். இரு மருந்துகள் கொண்ட பாக்கெட்டின் அதிகபட்ச விலையாக ரூ.1,19,500 ஆக நிர்ணயித்துள்ளளோம். இதை இரு நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் ஒரு டோஸ் மருந்தின் விலை ரூ.59,570 ஆகும். ஒரு லட்சம் டோஸ் மருந்துகள் வாங்கினால், 2 லட்சம் நோயாளிகளுக்குப் பயன்படுத்த முடியும்'' என்று கூறியுள்ளது.
இந்த ஆன்டிபாடி காக்டெயில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கொரோனாவில் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள் அதாவது 12 வயதுக்கு உட்பட்டவர்கள், வயதில் மூத்தவர்கள் மற்றும் உடல் எடை 40 கிலோவுக்குக் குறைவாக இருப்போருக்கும் செலுத்தலாம்.
கொரோனா உறுதி செய்யப்பட்டபின், அதிகமான பாதிப்புக்கு உள்ளாவார்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் செலுத்தலாம். இந்த மருந்தின் மூலம் குழந்தைகள், முதியோரைப் காக்க முடியும், உயிரிழப்பை 70 சதவீதம் தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.