கொரோனாவை கட்டுப்படுத்துவது மாநிலங்களின் பொறுப்பு... சொல்கிறார் பியூஷ் கோயல்
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வீணடிப்பதை நிறுத்த வேண்டுமென மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு என்றும், இதனை அனைத்து மாநிலங்களும் சிறப்பாக செய்யுமென்று எதிர்பார்ப்பதாகவும் பியூஷ் கோயல் கூறியுள்ளார். ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பியூஷ் கோயல்
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வீணடிப்பதை நிறுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை, ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் படுக்கை வசதியில்லை. பல மருத்துவனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்
அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜனை பகிர்ந்து பயன்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும், ஆக்சிஜன் வீணடிப்பதை நிறுத்த வேண்டுமென்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார்.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பயன்பாடு குறித்து, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு என்றும், இதனை அனைத்து மாநிலங்களும் சிறப்பாக செய்யுமென்று எதிர்பார்ப்பதாகவும் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 12 மாநிலங்களின் பிரதிநிதிகளுடன், ஆக்சிஜன் விநியோகம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 6177 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மாநில அரசுகளுக்கு விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார்.
இதன்படி, மகாராஷ்டிராவுக்கு 1500 மெட்ரிக் டன், டெல்லிக்கு 350, உத்தரப்பிரதேசத்துக்கு 800 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட உள்ளது. கொரோனாவுக்கு முன் 1000 முதல் 2000 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் தேவை இருந்ததாக கூறியுள்ள பியூஷ் கோயல், கடந்த 15ஆம் தேதி நிலவரப்படி, ஆக்சிஜனுக்கான தேவை 4,795 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது என்றார்.
இதையடுத்து, 9 வகை தொழிற்சாலைகளைத் தவிற மற்ற அனைத்து தொழிற்சாலை பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் விநியோகத்தை வரும் 22ம் தேதி முதல் மருத்துவமனைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாகவும் பியூஷ் கோயல் கூறினார்.
ஆக்சிஜன் விநியோகத்தை விரைவுபடுத்தும் வகையில், ரயில் பசுமை வழித்தடம் உருவாக்கப் பட்டுள்ளதாகவும் , ரயில்களில் டேங்கர் மூலம் ஆக்சிஜன் எடுத்துச் செல்ல உள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள பியூஷ் கோயல், மருத்துவ ஆக்சிஜன் தேவையை சமாளிக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளார்.