கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 டாலர்.. பெட்ரோல், டீசல் விலையும் அடியோடு சரியுமா?
Recommended Video
டெல்லி: கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 50 டாலராக இறங்கி விட்டது. ஆனால் இப்போதாவது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பார்களா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வியாழக்கிழமையன்று கச்சா எண்ணெய் விலை சர்வதேச மார்க்கெட்டில் பேரலுக்கு 50 டாலருக்கும் கீழ் குறைந்தது. கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவிற்கான விலை சரிவு இது. சவூதி அரேபியாவிடம் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய் அளவை குறைக்க இந்த விலைக் குறைப்பு என தகவல்கள் கூறுகின்றன. இதனால், பிற நாடுகளும் சவூதி அரேபியாவிடம் இருந்து இறக்குமதியை குறைத்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில் பேரலுக்கு 49.41 டாலராக இருந்தது. தற்போது சற்று அதிகரித்து கடந்த புதன் கிழமை பேரலுக்கு 49.83 டாலராக உள்ளது. இந்த விலை சரிவால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
6 மாதங்களில் இல்லாத விலை
சென்னை உள்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 6 மாதங்களில் இல்லாத விலையை எட்டியுள்ளது. வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்து மக்களை பெருமளவில் வதைத்து விட்டது.
மேலும் குறையுமா
ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதாலும் பெட்ரோல், டீசல் விலை இறங்கி வருகிறது. கடந்த மே மாதம் 14ம் தேதி பெட்ரோல் விலை 77 ரூபாயாக இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து 85 ரூபாய் வரை அதிகரித்து. தற்போது மீண்டும் குறைந்து வருகிறது .
விற்பனை இல்லை
கடந்த 6 மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை 20 சதவீதம் அளவிற்கு குறைந்தாலும், எரிப்பொருள் விற்பனை இன்றளவும் சீராகவில்லை. விலை இன்னும் கணிசமாக குறைந்தால் மட்டுமே எரிபொருட்களின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பெட்ரோலிய எண்ணெய் வணிக சங்கங்கள் தெரிவித்துள்ளது.
பாஜக வாக்குறுதி
காங்கிரஸ் ஆட்சியின் போது, பெட்ரோல் விலையை குறைக்க கோரி, பாஜக பல முறை போராட்டம் நடத்தியது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எரிபொருட்களின் விலையேற்றமே காரணம் என அப்போது குற்றம்சாட்டியது. மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைப்போம் என தேர்தல் வாக்குறுதியும் அளிக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை காட்டிலும், எரிபொருட்களின் விலை மேலே சென்றது. மாநில தேர்தல்களின் போது எல்லாம் குறைந்த எரிபொருட்களின் விலை, தற்போது மீண்டும் குறைய தொடங்கி உள்ளது.
விலைகுறைப்பு
சர்வதேச சந்தைகளின் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றி, இறக்கி வந்த நிலையில், தற்போது, எரிபொருட்களின் விலை கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்திருப்பது வாடிக்கையாளர்களை நிம்மதி அடைய செய்துள்ளது. இன்னும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே நேரம், எரிபொருட்களின் விலையை கட்டுக்குள் மத்திய அரசு வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.