தங்கம் விலை சீக்கிரமே உயர போகுது? இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு ஆலோசனை! மேஜர் தகவல்
டெல்லி: வரும் பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலாகும் நிலையில், இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கடந்தாண்டு பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்தாண்டு தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மத்திய அரசு வரும் பிப். 1ம் தேதி இந்தாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான ஆலோசனைகள் மற்றும் தயாரிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பட்ஜெட்டில் இடம்பெறக்கூடிய அறிவிப்புகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிப்பது தொடர்பாகவும் அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
தங்கத்தின் மீதான வரி உயர்த்தப்படலாம்:
இதற்கிடையே மத்திய அரசு இறக்குமதி வரி தொடர்பாக முக்கிய முடிவை எடுக்கப் போவதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மத்திய அரசு, தங்கம் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான சுங்க வரியை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல் கூறப்படுகிறது. அதில் குறிப்பாகத் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்துவது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக விவரம் அறிந்த இரு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது கடந்தாண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியைக் குறைத்தது. இந்த வரி குறைப்பால் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. வரி குறைப்பால் தங்கம் இறக்குமதி அதிகரித்திருந்தால் மீண்டும் இறக்குமதி வரியை அதிகரிக்கப்படலாம் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறக்குமதி வரி:
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதாவது கஸ்டம் டியூட்டியில் மாற்றங்கள் அறிவிக்கப்படும். மக்களைப் பணவீக்கத்திலிருந்து பாதுகாப்பது, அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக இறக்குமதி வரி பொதுவாக மாற்றியமைக்கப்படும்.. அதன்படி தான் கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12%ல் இருந்து 6 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.
என்ன காரணம்:
இந்த வரி குறைப்புக்குப் பிறகு தங்க இறக்குமதி பல மடங்கு அதிகரித்தது. அதேநேரம் ரத்தினம் மற்றும் நகைகள் போன்ற பொருட்களின் ஏற்றுமதி சுருங்கியது. அதாவது இறக்குமதி வரி குறைப்பு என்பது தங்கத்தை இறக்குமதி செய்து, அதை நகைகளாக மாற்றி ஏற்றுமதி செய்வோருக்கு உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏற்றுமதி அதிகரிக்கவில்லை.. மாறாக இந்தியர்கள் தங்கம் வாங்குவதே அதிகரித்திருக்கிறது.
அதிகாரிகள் சொல்வது என்ன:
அதாவது இறக்குமதி வரி குறைப்பிற்குப் பிறகு, தங்க இறக்குமதி 49% வரை அதிகரித்துள்ளது. ஆனால், நகையாக மாற்றி ஏற்றுமதி செய்வது 10% வரை குறைந்துள்ளது. இதன் காரணமாகவே இறக்குமதி வரியை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "தங்க இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம்" என்றார்.
மற்றொரு அதிகாரி இது தொடர்பாகக் கூறுகையில், "பல்வேறு பொருட்களின் இறக்குமதி வரியை மாற்றி அமைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவது உண்மை தான். அந்த லிஸ்டில் தங்கமும் இருக்கிறது. ஆனால், இறுதி முடிவு என்பது பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டு ஏற்றுமதியை அதிகரிப்பதையே நோக்கமாக இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications